சினிமா
சந்தானம் படம் மூலம் 400-யை தொட்ட சௌகார் ஜானகி
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படத்தில், நடிகை சௌகார் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் தற்போது ‘டகால்டி’, ‘டிக்கிலோனா’ படங்கள் உருவாகி வருகிறது. மேலும் ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சௌகார் ஜானகி நடிக்கிறார். இந்த படம் அவருக்கு 400வது படமாகும்.
1952-ம் வருடம் 'வளையாபதி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சௌகார் ஜானகி, அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் போன்ற முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.
முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாமல், அவர் காலத்தில் முன்னணி நாயகிகளாக இருந்த ஜெயலலிதா, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, ஜெயந்தி, வாணிஸ்ரீ, ஆகியோருடனும், மனோரமா, சச்சு, போன்ற நகைச்சுவை நடிகைகளுடனும் நடித்திருக்கிறார்.
சிவாஜி கணேசனுடன் நடித்த 'புதிய பறவை' படத்தில் இடம்பெற்ற 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
கமலுடன் நடித்த 'ஹேராம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய 'சௌகார்' ஜானகி தற்போது சந்தானம் படத்தின் மூலம் 400-வது படத்தை தொட்டிருக்கிறார்.