சினிமா
ரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்
ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பிரபல நடிகர் பெற்றுள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல், கேரளாவில் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தை கேரளாவில் நடிகர் பிருத்வி ராஜ் வெளியிட்டிருந்தார்.
தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது கேரள விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் அதிகப்படியான திரையரங்களில் பிகில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகில் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கிஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருக்கிறது.