சினிமா
விமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு
பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தை விமர்சித்த விமர்சகர்களை படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூர் சாடியுள்ளார்.
பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராப், மந்த்ரா பேடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் கடும் எதிர்வினைகளையே சந்தித்தது. பெரும் முதலீடு என்பதால் இந்த விமர்சனத்தால் எப்படிப் போட்ட முதலீடு திரும்ப வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் நல்ல வசூல் செய்தது.
'சாஹோ' படத்துக்குக் கிடைத்த விமர்சனங்கள் குறித்து நாயகி ஷ்ரத்தா கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது:- ’வெள்ளிக்கிழமை அன்று படத்தின் விமர்சனங்கள் வெளியானபோது, சில விமர்சகர்கள் இந்தப் படம் தேறாது என்று சொன்னார்கள். ஆனால், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ரசிகர்கள் படத்தை விரும்பினர்.
ஒரு நிமிடம் நானே என்னிடம் என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டேன். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதுவரை எனது படங்களில் அதிக வசூல் செய்த படம் இது. அதனால்தான் சொல்கிறேன், ரசிகர்களிடம் எது சேரும், சேராது என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.
தமிழில் 'சாஹோ' திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. இதில் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் பலருக்கும் சுமார் 60 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 'சாஹோ' படக்குழுவோ தாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.