சினிமா
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கார்த்தி தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தேவ் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் கார்த்தி மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' படத்தில் நடிக்கிறார். பெரும்பாலும் சிறைச்சாலைக்குள் காட்சிகள் நடைபெறுவதாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை.
இதையடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடிக்கிறார். கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ’சுல்தான்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு அதிருப்தி அடைந்தனர்.
இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே டைட்டிலில் பத்தாண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் ஒரு அனிமேஷன் படத்தில் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.