சினிமா
மதுமிதா

தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?- நடிகை மதுமிதா பேட்டி

Published On 2019-08-20 06:51 GMT   |   Update On 2019-08-20 06:51 GMT
பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன்? அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். 

தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா போட்டி விதிகளின்படி வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா தனியார் இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். 



பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- ‘பிக்பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இன்னொரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. மூன்றாவது சீசனில் அழைக்கும்போது இந்த முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். 

நாம் தமிழ் ரசிகர்களுக்காக தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் சுத்துவார். ஒரு அக்கா மாதிரி இருந்து அவருக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை. 

எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் லாஸ்லியா நன்றாக தான் இருந்தார். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவரது மனம் மாறிவிட்டது. 



பிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர். கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. 

நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன்.

ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’.

இவ்வாறு மதுமிதா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News