சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், படப்பிடிப்பு முடிந்தவுடன், இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகள் இடம் பெறுகின்றன.
இந்தி நடிகர்கள் பிரதீக் பார்பர், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ரஜினியின் தோற்றத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.
சூர்யாவின் ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட ரஜினி, ‘‘தர்பார் மாதிரி இன்னொரு படம் எனக்கு அமைந்துவிடக் கூடாது என்பதுபோல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தீயாக வேலை பார்க்கிறார்’ என்று பேசியிருந்தார்.
தற்போது மும்பையில் கடைசி கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரஜினி தனது அடுத்த புதிய படத்தை இறுதிசெய்யும் வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்ததும் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
மழை, பனி உள்ளிட்ட தட்பவெப்ப சூழலை கணக்கிட்டு, அதற்கேற்ப செப்டம்பரில் ரஜினி இமயமலைக்கு செல்ல உள்ளார் என்கிறார்கள்.