சினிமா
சரவணன்

பேருந்தில் பெண்களை உரசினேன் என கூறியது ஏன்?- சரவணன் விளக்கம்

Published On 2019-07-30 08:00 GMT   |   Update On 2019-07-30 08:04 GMT
பேருந்தில் பெண்களை உரசினேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கூறியது சர்ச்சை ஆன நிலையில், மன்னிப்பு கேட்ட அவர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்பாஸ் வீட்டில் தங்கி இருக்கும் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் கமல் ஹாசனின் உரையாடல் அமையும்.

நேற்று முன்தினம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மீராமிதுன் சேரன் மீது சுமத்திய வீண்பழி குறித்து கமல்ஹாசன் பேசினார். ஒரு டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறாக பிடித்து இழுத்ததாக மீராமிதுன் கூறியதை அடுத்து அவருக்கான குறும்படமும் ஒளிபரப்பானது. இதில் சேரன் மீது தவறு இல்லை என்பது தெரியவந்தது.



தொடர்ந்து மீராமிதுனிடம் பேசிய கமல்ஹாசன், அரசு பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். மேலும் பேசிய அவர், ‘பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டும் என்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு’ என்று கமல்ஹாசன் கூற, போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் தனது கையை உயர்த்தி ஆமோதித்தார்.

கமல்ஹாசன் உடனே ‘பாருங்கள்... சரவணன் கூட அதை கண்டித்திருப்பார் போல’ என்று கூறினார். ஆனால் சரவணனோ ‘நான் கல்லூரி காலத்தில் பெண்களை உரசுவதற்காகவே சென்று இருக்கிறேன்’ என்று பொதுவெளியில் கூறினார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியானார்கள். சுதாரித்த கமல்ஹாசன், ‘சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார்’ என்று கூறினார். 

அதற்கு அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டினர். இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தின் மூலம் ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டிருக்கும் அவர், ‘பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒருவர் கூறுகிறார். அதையும் ஒளிபரப்புகிறார்கள்.

பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பார்வையாளர்களும், பெண்களும் கைதட்டுகின்றனர்” என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சின்மயியின் கருத்துக்கு ஆதரவான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவின. சிலர் கமல்ஹாசனையும் சேர்த்தே கண்டித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்ட சரவணன், மக்கள் மத்தியில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறியதாவது: கல்லூரி பருவத்தில் பல மாணவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்திருக்கிறேன். நான் செய்த தவறை யாரும் செய்யக் கூடாது என்பதை தெளிவுப்படுத்தவே இதனை சொல்ல முயன்றேன், சில காரணங்களால் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போனது. நான் பேசியது யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்’ என்று சரவணன் தெரிவித்தார்.
Tags:    

Similar News