சினிமா
நாசர்

நடிகர் சங்க உறுப்பினர்களை நீக்கிய விவகாரம்- நாசர் விளக்கம்

Published On 2019-07-29 08:47 GMT   |   Update On 2019-07-29 08:47 GMT
உறுப்பினர்களை நீக்கிய விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர், தொழில்முறை அல்லாத உறுப்பினர் என இரண்டு வகையான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆயுட்கால உறுப்பினர், தற்காலிக உறுப்பினர் என இரண்டு வகைகள் உண்டு. மொத்தம் 4 வகையான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

தொழில்முறை உறுப்பினர்களுக்கு தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இவர்களில் 61 ஆயுட்கால தொழில்முறை உறுப்பினர்கள் தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இவர்களில் பெரும்பாலானோர் நாமக்கல் பகுதியை சேர்ந்தவர்கள்.

குறிப்பாக விஷால், நாசர் அணி தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு தான் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்பட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பதிவாளருக்கு மாற்றப்பட்ட உறுப்பினர்கள் சார்பில் புகார்கள் சென்றது. இதன் அடிப்படையில் நடிகர் சங்கத்தில் இருந்து 61 உறுப்பினர்களை நீக்கியது குறித்து விளக்கம் கேட்டு தென் சென்னை சங்கங்களின் பதிவாளர் நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார்.



இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த ஜூன் 17-ந்தேதி நாசர், விஷால் அணி சார்பில் பதிவாளரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கம் போதிய திருப்தி அளிக்காததால் சங்கத்துக்கு நடக்க இருந்த தேர்தலை நிறுத்துமாறு ஜூன் 19-ந்தேதி உத்தரவிட்டார். பின்னர் இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்காக பதியப்பட்டு தேர்தலை நடத்தலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை மட்டும் நடத்தப்பட கூடாது என்றும் உத்தரவு வந்தது. இதன்படி ஜூன் 23-ந்தேதி நடந்த தேர்தலுக்கு இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை.

இதற்கிடையே நடிகர் சங்கத்தில் இருந்து 61 ஆயுட்கால உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றிய விவகாரத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர், மற்றும் சங்க மேலாளர் பாலமுருகன் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
Tags:    

Similar News