சினிமா
கதாநாயகி என்ற வார்த்தை பயமுறுத்துவதாக உள்ளது - ஷ்ரத்தா ஸ்ரீநாத்
இவன் தந்திரன், விக்ரம் வேதா படங்களில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதாநாயகி என்ற வார்த்தை பயமுறுத்துவதாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார்.
தெலுங்கில் ஜோடி படத்திலும், கன்னடத்தில் கோத்ரா படத்திலும் நடிக்கிறார். திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கதாநாயகனாக, கதாநாயகியாக வலம் வரவே விருப்பம் கொள்ளும் நிலையில் கதாநாயகியாக வலம் வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி அல்ல நடிகை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:- ’கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகள் உண்மையிலேயே நடிகர் என்ற வார்த்தையை பிரதிபலிக்கவில்லை. கதாநாயகன் என்றால் பலரை அடித்து நொறுக்க வேண்டும்.
கதாநாயகி என்றால் அழகாகவும், கிளாமராகவும் இருக்க வேண்டும். நான் அப்படி அல்ல. கதாநாயகி என்ற வார்த்தை பயமுறுத்துவதாக உள்ளது. ஆனால், இப்போது அதை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் நான் நடிகை தான்’ என்று கூறியுள்ளார்.