சினிமா
சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது - ஸ்ருதிஹாசன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது என்று கூறியிருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் 2017-ல் திரைக்கு வந்த 3 படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். லண்டன் காதலர் மைக்கேலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக வருகிறார். ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-
“நடிக்க வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா இல்லை உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இந்த துறைக்கு வந்தீர்களா?” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா? என்ற பழமொழியை சிறுவயதில் இருந்தே கேட்டு இருக்கிறேன். அந்த பழமொழிதான் இதற்கு பதில்.
நான் சினிமா குடும்பத்தில் வளர்ந்தேன். ஆனால் உனது முதல் தேர்வு எது என்று கேட்டால் இசை என்றுதான் சொல்வேன். சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது. சிறுவயதில் பள்ளியில் இருந்து வந்ததும் எனது தந்தையுடன் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போய்விடுவேன்.
ஜெனரேட்டர் வேன் அருகில் உட்கார்த்து வீட்டுபாடம் எழுதுவேன். தயாரிப்பு நிர்வாகிகள் என்னை அன்பாக கவனித்துக்கொள்வார்கள். அதனால்தான் எனக்கு சினிமா மீது பற்று வந்ததா? என்று தெரியவில்லை. சினிமா துறைதான் என்னை அழைத்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். எனது வாழ்க்கையை சினிமாவில் இருந்து பிரித்து பார்க்கவே முடியாது.”
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.