சினிமா
கல்லூரி விடுதிகளின் மறுபக்கத்தை விவரிக்கும் படம் ‘மயூரன்’
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தா சுப்பராயன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மயூரன்’ படம், கல்லூரி விடுதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஏராளமானப் படங்கள் வெளியானாலும், கல்லூரி விடுதிகளை மையப்படுத்திய படம் என்பது அரிதான ஒன்று தான். அந்த அகையில், கல்லூரி விடுதிகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘மயூரன்’ கல்லூரி விடுதிகளின் மற்றொரு பக்கத்தை காட்டும் படமாகவும் உருவாகியுள்ளது.
இயக்குநர் பாலாவிடம் ’நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தா சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார். பி.எப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகிய நான்கு பேர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இது உண்மை கதை இல்லை என்றாலும், இயக்குநர் நந்தா சுப்பராயன், தனது வாழ்வில் சந்தித்த சில விடுதி அனுபவங்களை வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். கல்லூரி விடுதி என்று சாதாரணமாக நாம் நினைத்தாலும், நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு பல சர்ச்சையான விஷயங்கள் பல விடுதிகளில் நடந்து வருகிறது. அதில் சில வெளி உலகிற்கு தெரிந்தாலும், தெரியாத சம்பவங்கள் பல உண்டு. அப்படி நடக்கும் சம்பவங்களுக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? போன்ற விடுதி குறித்து அறியாத பல விஷயங்களை இப்படத்தில் பரபரப்பாக இயக்குநர் நந்தா சுப்பராயன் சொல்லியிருக்கிறாராம்.
சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்திருக்கிறார். குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுத, அஸ்வின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். டான் அசோக் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜாய்மதி நடனம் அமைத்திருக்கிறார். மணவை புவன் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார். படம் முழுவதுமாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டியதோடு ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.