சினிமா
19 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கமல்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி
கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசனின் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சி தொடங்கப்பட்ட பின்னர், இந்தியன் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்நிலையில் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “ கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.
2000-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் தெனாலி படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏ.ஆர் ரஹ்மானும், கமலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.