சினிமா
75 நாட்கள்..... 100 லொகேஷன்- சிவகார்த்திகேயனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்களை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான "கனா" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரியோ நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 3-வது படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். ‘வாழ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 75 நாட்களாக நடைபெற்று வந்த ’வாழ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், சுமார் 100 லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.