சினிமா
இஷா குப்தா

ஓட்டல் ஓனர் மீது பாலியல் புகார் கூறும் பிரபல நடிகை

Published On 2019-07-08 17:41 IST   |   Update On 2019-07-08 17:41:00 IST
இரவு விருந்துக்கு சென்றிருந்த போது ஓட்டல் ஓனர் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பேபி, ரஸ்தம் உள்பட பல இந்தி படங்களில் நாயகியாக நடித்தவர் இஷா குப்தா. தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இஷா குப்தா தனது தோழிகளுடன் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு இரவு விருந்து சாப்பிட சென்றார். அவர் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஓட்டல் உரிமையாளர் ரோகித் விக் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளார்.

ரோகித்தின் செயலால் இஷா கோபம் அடைந்துள்ளார். இது குறித்து இஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் ஒருவர் என்னை தன் கண்களால் பலாத்காரம் செய்தார். ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு இரண்டு, மூன்று முறை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து என்னுடைய 2 பாதுகாவலர்களும் என்னை சுற்றி நிற்க வேண்டியதாகி விட்டது.



ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவே இதற்கு சாட்சி. அந்த நபரின் பெயரை கண்டுபிடித்து கூறுங்கள். இவ்வாறு இஷா கோரிக்கை விடுத்தார். இஷாவை கண்களால் பலாத்காரம் செய்த நபரின் பெயர் ரோகித் விக் என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதை அடுத்து இஷா ரோகித்தின் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அவரை மீண்டும் விளாசி உள்ளார். ஒரு பெண்ணாக பிறந்தது சாபக்கேடா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Similar News