சினிமா
சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘ஓ பேபி’ படத்திற்கு ரசிகர்கள் பெரிய கட்-அவுட் வைத்து அவரை பயப்பட வைத்திருக்கிறார்கள்.
சமந்தா நடித்துள்ள ‘ஓ பேபி’ தெலுங்கு படம் நேற்று திரைக்கு வந்தது. இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சமந்தாவுக்கு, ரசிகர்கள் நடிகர்களுக்கு இணையாக பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். முதல் தடவையாக அவருக்கு கட் அவுட் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-
“ஐதராபாத் தியேட்டரில் ரசிகர்கள் எனக்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை பார்த்து பயமாகவும் இருக்கிறது. நான் ஏற்கனவே நடித்த யூ டர்ன் படம் நன்றாக உள்ளது என்று பலர் பாராட்டியும் வசூல் எதிர்பார்த்தபடி இல்லை. எந்த படத்துக்கும் வசூல் முக்கியம்.
நல்ல வசூல் கிடைத்தால்தான் சினிமா துறை நன்றாக இருக்கும். வசூல் வரவில்லை என்றால் எவ்வளவு நல்ல படத்தில் நடித்தாலும் திருப்தி வராது. எனது கணவர் சைதன்யாவிடம், எனக்கு கட் அவுட் வைத்து இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர். படத்துக்கு வசூல் வரவில்லை என்றால் ஓடிப்போய்விடுவேன் என்று தமாஷாக கூறினேன்.
இவ்வாறு சமந்தா கூறினார்.