சினிமா

அஜய் தேவ்கனுக்கு போஸ்டர் மூலம் அன்பு வேண்டுகோள் விடுத்த ரசிகர் - காரணம் இது தான்

Published On 2019-05-06 10:01 IST   |   Update On 2019-05-06 10:01:00 IST
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அஜய் தேவ்கனுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது ரசிகர் போஸ்டர் மூலம் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #AjayDevgan #FanRequests
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் நானக்ராம்(40).  ஜெய்ப்பூரின் சங்கனர் பகுதியில் வசிக்கும் இவர், வீட்டில் இருந்தபடியே பால் வியாபாரம் செய்துவருகிறார்.

இவர் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அஜய் தேவ்கனின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஜய் தேவ்கன் புகையிலை விளம்பரங்களில் நடிப்பதை கண்டு அவரால் கவரப்பட்டு தானும் அதனை பயன்படுத்தி வந்துள்ளார். அஜய் தேவ்கன்னை போலவே அவரது ஸ்டைலில் புகையிலை பயன்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து புகையிலை பயன்படுத்தவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான நோயால் தனக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை உணர்ந்த நானக்ராம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளார்.



இதனையடுத்து நானக்ராம் 1000 துண்டு பிரசுரங்களை பொது இடங்களில் விநியோகம் செய்து எப்படியாவது அஜய் தேவ்கனை இந்த செய்தி சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரசுரங்களில்  ‘நீங்களும்(அஜய் தேவ்கன்) உங்கள் குடும்பத்தாரும் எத்தனை முறை புகையிலை பயன்படுத்தியிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது. மேலும் போஸ்டர்களும் பயன்படுத்தி வருகிறார்.

இது குறித்து அவரது மகன் தினேஷ் கூறுகையில், ‘எனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தேவ்கன் விளம்பரத்தில் பயன்படுத்திய புகையிலையை பயன்படுத்தி வந்தார். அப்போது தேவ்கனால் ஈர்க்கப்பட்டார். இப்போது புற்றுநோயால் அவதிப்படுகிறார். இதன் காரணமாக இது போன்று உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த பொருட்களுக்கு, தனது ஹீரோவான அஜய் விளம்பரம் செய்வதை எனது தந்தை விரும்பவில்லை. எனவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்’ என கூறியுள்ளார். #AjayDevgan #FanRequests 



 





 

Similar News