சினிமா
சேர்ந்து நடிப்போம்னு விஜய் சொன்னார் - சாந்தனு
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் `இராவண கோட்டம்‘ படத்தில் நடிக்கும் சாந்தனு, விஜய்யுடனான தனது பழக்கம் பற்றி பேசும் போது, ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து நடிப்போம்னு விஜய் சொன்னதாக கூறினார். #Shanthnu
‘மதயானைக் கூட்டம்‘ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்க இருக்கும் படம் `இராவண கோட்டம்‘. இந்த படத்தின் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார்.
இந்த படத்துக்காக சாந்தனுவுக்கு விஜய் வாழ்த்து கூறி இருக்கிறார். இது குறித்து சாந்தனு கூறியதாவது:-
‘நான் எப்போதுமே ஒரு படம் ஆரம்பிக்கும்போது விஜய் சாருக்கு போன் பண்ணியோ, மெசேஜ் பண்ணியோ விஷயத்தை சொல்வது வழக்கம். அந்த வகையில்தான் இவர்தான் டைரக்டர், படத்தோட டைட்டில் இதுதான்‘ என்று அனுப்பினேன். `வாழ்த்துகள் நண்பா. டைட்டில் செம்ம..’ என்று பதிலுக்கு செய்தி அனுப்பி இருந்தார்.
அதைத்தான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று படங்களில் இருந்து இப்படி அவருக்குத் தெரிவிப்பது என்னுடைய வழக்கம். எப்போதாவது நேரம் கிடைக்கும்போது அவரும், நானும் பேசுவோம். `எப்படி புராஜெக்ட் போயிட்டு இருக்கு, இதை அப்படி பண்ணு, இப்படி பண்ணுனு சொல்லுவார். நல்லது, கெட்டது என நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறோம்.
அவருடன் இணைந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். ஒரு முறை யதேச்சையாப் பேசிட்டு இருக்கும்போது, `சரியான நேரம் வரும்போது இரண்டு பேரும் சேர்ந்து நடிப்போம். சொல்றேன்’னு சொல்லியிருக்கார்’. இவ்வாறு அவர் கூறினார். #Shanthnu #Vijay #RaavanaKottam