சினிமா
இயக்குனர் மீது கங்கனா ரணாவத் புகார்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணாவத் பாலிவுட் இயக்குநர் பஹலாஜ் நிஹலானி மீது புகார் தெரிவித்துள்ளார். #KanganaRanaut
‘தாம் தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2 முறை தேசிய விருதுகள் பெற்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார்.
விஜய் இயக்கும் இந்த படத்துக்கு தலைவி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்தியிலும் இப்படம் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கங்கனா. கடந்த வருடம் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது சரமாரியாக குற்றம் சாட்டியதுடன் போலீசில் புகார் அளித்தார்.
தற்போது பாலிவுட் பிரபல இயக்குனர் பஹலாஜ் நிஹலானி மீது புகார் கூறியிருக்கிறார். ‘ஐ லவ் யூ பாஸ்’ இந்தி படத்தில் நடித்தபோது, உள்ளாடை அணியாமல் கயிறுகள் மட்டுமே கட்டிக்கொண்டு தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்க, இயக்குனர் நிஹலானி வற்புறுத்தியதாகவும், அது ஒரு வகையான ஆபாச படம் என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஐ லவ் யூ பாஸ்’ படத்தில், நடுத்தர வயதுடைய அலுவலக மேலதிகாரி ஒருவருடன் உடலுறவு கொள்ளும் இளம்பெண் கதாபாத்திரம் தனக்கு தரப்பட்டது. அது எனக்கு ஏற்ற படம் இல்லை என்பதால் நான் நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கங்கனாவின் புகாரை மறுத்திருக்கிறார் இயக்குனர் நிஹலானி.
‘ஐ லவ் யூ பாஸ்’ ஆபாச படம் இல்லை, அமிதாப், ரிஷிகபூர் ஆகியோரை இந்த படத்தில் நடிக்க கேட்டேன். இது எப்படி ஆபாச படமாக இருக்க முடியும். கங்கனா இப்படத்துக்காக புகைப்படத்துக்கு அளித்த போஸுக்கு பிறகுதான் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கின என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார். இயக்குனர் மீது கங்கனா கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. #KanganaRanaut