சினிமா

திருநங்கைகளை அவமதித்ததாக புகார் - விஜய் சேதுபதியை கைது செய்ய வற்புறுத்தல்

Published On 2019-04-03 04:53 GMT   |   Update On 2019-04-03 04:53 GMT
நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். #VijaySethupathi
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர். 

ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். 



திருநங்கைகள் ரேவதி, பிரேமா, கல்கி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதுகுறித்து கூறியதாவது:-

‘‘விஜய் சேதுபதி மீது மரியாதை வைத்து இருந்தோம். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அதை கெடுத்துக்கொண்டார். திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் வசனம் பேசி உள்ளார். திருநங்கைகள் எப்போது குழந்தைகளை கடத்தினார்கள் என்று சொல்ல முடியுமா? கதையை கேட்டதும் விஜய் சேதுபதி அதில் நடிக்காமல் புறக்கணித்து இருக்க வேண்டும். 

திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சியில் நடித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. குழந்தை பெற்றபின் அவர் திருநங்கையாக மாறுவதுபோன்றும், மனைவியிடம் புடவை வாங்கி உடுத்தும் காட்சிகளும் எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்துள்ளது’’

இவ்வாறு கூறியுள்ளனர்.
Tags:    

Similar News