சினிமா

இயக்குநர் மகேந்திரன் மறைவு - வைரமுத்து இரங்கல்

Published On 2019-04-02 11:56 IST   |   Update On 2019-04-02 11:56:00 IST
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். #Mahendran #RIPMahendran
இயக்குனர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது,

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப் படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப் படமாக்கிப் படைப்பிலக்கியத்திற்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.


புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி.

இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #DirectorMahendran #RIPMahendran #Mahendran 

Similar News