சினிமா

நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்

Published On 2019-03-08 18:44 IST   |   Update On 2019-03-08 18:44:00 IST
‘போங்கு’ படத்தில் கதாநாயகியாக நடித்த ருஹி சிங்கிற்கு வாலிபர் ஒருவர் போனில் ஆபாச செய்திகளையும், மிரட்டல் செய்திகளையும் அனுப்பி இருக்கிறார். #RuhiSingh
நட்டி என்கிற நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ருஹி சிங். இந்தியில் காலண்டர் கேர்ள்ஸ், இஷ்க் பார் எவர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு மாதமாக இவருக்கு செல்போனில் வாலிபர் ஒருவர் மிரட்டல் விடுத்து தொல்லை கொடுத்தார்.

இதுபற்றி ருஹி சிங் கூறி இருப்பதாவது:-

இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப் என்று சொல்லிக்கொண்டு ஒரு நபர் எனக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச செய்திகளையும் மிரட்டல் செய்திகளையும் அனுப்பி வருகிறார். ஆரம்பத்தில் அந்த செய்தியை நான் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அதேபோல் செய்துவருகிறார்.

அவரது எண்ணை நான் பிளாக் செய்துவிட்டேன். ஆனாலும் புதுப்புது எண்களில் இருந்து எனக்கு ஆபாச செய்தி அனுப்புகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் இது குறித்து விசாரிப்பதாக கூறினார்கள். ஆனாலும் எந்த பலனும் இல்லை. மீண்டும் அந்த நபர் ஆபாச செய்தி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.



அவரிடம் தொலைபேசியில் நானே பேசி, இதுபோல் செய்வது தவறு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தேன். அவரோ ‘நானே ஒரு போலீஸ் அதிகாரி தான். நான் ஜெயிலுக்கு செல்ல தயார் உன்னால் முடிந்ததை செய்’ என்கிறார். அவர் அனுப்பிய செய்தியில் நான் எப்போது எங்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

என்னை பற்றிய நிறைய வி‌ஷயங்களை அந்த நபர் தெரிந்து வைத்திருக்கிறார். யாருடன் நான் பேசுகிறேன். யாரை சந்திக்கிறேன் என்பதை எல்லாம் பெயர் விபரங்களுடன் சொல்கிறார். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

இதுபோன்ற நபர்களை சும்மா விடக்கூடாது. அதனால் தான் இந்த வி‌ஷயங்களை பகிரங்கமாக சொல்கிறேன். இதுபோல் தொந்தரவு அனுபவிக்கும் வேறு எந்த பெண்ணும் பயப்படக்கூடாது என்பதே எனது நோக்கம். யார் தொந்தரவு செய்தாலும் உடனடியாக சைபர் கிரைமில் புகார் செய்யுங்கள்’.

இவ்வாறு ருஹி சிங் கூறினார்.

Similar News