சினிமா

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்

Published On 2019-03-06 18:44 IST   |   Update On 2019-03-06 18:44:00 IST
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு இன்று காலமானார். #TypistGopu
பிரபல நடிகர் டைப்பிஸ்ட் கோபு. இவருக்கு வயது 85. லால்குடியை சொந்த ஊராக கொண்ட இவர் 50 ஆண்டுகளாக 600க்கும் அதிகமான திரைப்படங்கள், ஏராளமான நாடகங்களில் நடித்தவர்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபால ரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது. 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் சினிமாவில் சாது மிரண்டால், அதே கண்கள், எங்க மாமா, பாலாபிஷேகம், சோப்பு சீப்பு கண்ணாடி, வா ராஜா வா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, சிம்லா ஸ்பெஷல், கற்பூரம், அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, நாலும் தெரிந்தவன், சொந்தங்கள் வாழ்க, நத்தையில் முத்து, கல்லும் கனியாகும், தரிசனம், தேடி வந்த லெட்சுமி, சிவப்புச் சூரியன், பொண்ணு மாப்பிள்ளை, காசேதான் கடவுளடா, உரிமைக்குரல், ஒரு கைதியின் டைரி, உயர்ந்த மனிதன், கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், தேனும் பாலும், எங்க மாமா, வண்ணக்கனவுகள் போன்ற பல்வேறு படங்களில் நடித்தார்.

டைப்பிஸ்ட் கோபு நாற்பது வருடங்களுக்கு முன் சென்னை கோபாலபுரத்தில் பூர்வீகமாக சொந்தமாக பெரிய பங்களா, இருநூறு பவுன் தங்க நகை, நிறைய வெள்ளி பாத்திரங்கள், வேலையாட்கள் என்று நல்ல செழிப்பாக வாழ்ந்தார். பின்னாளில் முதுமையும் வறுமையுமாகத்தான் மிகச்சிறிய வீட்டில் மனைவி, மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். 

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்கள் படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். 

டைப்பிஸ்ட் கோபுவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #TypistGopu

Similar News