சினிமா

வடசென்னை 2 எடுக்க வேண்டாம் - வெற்றி மாறனுக்கு கோரிக்கை

Published On 2018-11-13 11:23 GMT   |   Update On 2018-11-13 11:23 GMT
வடசென்னை படத்தின் 2ம் பாகத்தை எடுக்க வேண்டாம் என்று இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரசிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். #VadaChennai #VetriMaaran
தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'வடசென்னை'. இதன் அடுத்த பாகத்தை அடுத்த ஆண்டு எடுத்து வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார். அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். ’வடசென்னை’ என்று சொன்னாலே ஏளனமாகவும் பயமாகவும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது உங்களின் ’வடசென்னை’ப் படத்தால் அது மீண்டும் வந்துவிட்டது.

இரவு நேரத்தில், ’வடசென்னை’ பகுதிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள். எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள். போதும். ’வடசென்னை’ முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்கள்.



தயவு செய்து கெஞ்சிக் கேட்கிறோம், ’வடசென்னை 2’ எடுக்கவே எடுக்காதீர்கள்” என்று மிகவும் கோபமாக பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சுக்கு இடையே பலர் தடுத்தும், தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன், “உங்களின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய விளக்கத்தையும் கேளுங்கள். அடுத்தவர் பேசவும் அனுமதி கொடுங்கள். இப்போது, ’வடசென்னை 2’ எடுக்கமாட்டேன் என்று சொன்னால், சந்தோ‌ஷமாகி விடுவீர்களா? இங்கு யாராவது ’வடசென்னை’ நல்லாயிருக்கு என்று சொன்னார்களா? எல்லோரும் அவரவர் கருத்துக்களை வைக்கிறார்கள். அதுபற்றி விளக்குகிறேன். அவ்வளவுதான்” என்று அமைதியுடன் பதிலளித்திருக்கிறார்.
Tags:    

Similar News