சினிமா

ரஜினி-கமல் மத்திய அரசை கண்டிக்காதது ஏன்? டைரக்டர் கவுதமன் கண்டனம்

Published On 2017-10-04 18:25 IST   |   Update On 2017-10-04 18:25:00 IST
தமிழ்நாடு மக்கள் பிரச்சினைகளுக்காக ரஜினிகாந்த், கமல் ஹாசன் மத்திய அரசை கண்டிக்காதது ஏன்? என்று டைரக்டர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் டைரக்டர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். இன்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து வைகோ உள்பட நானும் மற்றும் சிலரும் இலங்கையில் நடந்த தமிழர்கள் படுகொலை குறித்து குரல் கொடுத்தோம். அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தோம். அதை கண்டு ஐ.நா. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிங்கள ராணுவ அதிகாரிகள் ஐ.நா. சபையின் பிரதான மண்டபத்தில் வைகோவிடம் தகராறு செய்தனர்.

அதுபோல் என்னிடமும் நீ தமிழனா? தமிழ்நாட்டுக்காரனா? இங்கே நீங்கள் வரக்கூடாது என மிரட்டினார்கள். இவை அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. அதன் முலம் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நம்புகிறேன்.

சிங்கள ராணுவத்திடம் இருந்து ஒரு போதும் நீதி கிடைக்காது. எனது இந்திய அரசு இதில் தலையிட்டு ஈழ தமிழர்களுக்கு நீதி பெற்று தர வேண்டும்.

ரஜினியும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் உச்சமான அதிகாரத்தின் உள்ளவர்களின் மறைவில் இருந்து அரசியல் நடத்தக்கூடாது. மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். தற்போது தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகளில் தலையிடும்படி மத்திய அரசை கண்டிக்க அவர்கள் பயப்படுவது ஏன்?

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் மரணம் அடைகின்றனர். ஒரு கொசுவிடம் இருந்து தமிழக அரசு மக்களை காப்பாற்ற முடிய வில்லை. இந்த நிலையில் பிரச்சினைகளில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவார்கள். இது சாவு இல்லை. பச்சைப் படுகொலை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News