சினிமா

நடிகர் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை: வெங்கட்பிரபு

Published On 2017-02-27 06:43 GMT   |   Update On 2017-02-27 06:43 GMT
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து நகைச்சுவை படம் எடுக்க ஆசை இருப்பதாக நடிகரும், டைரக்டருமான வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். அது குறித்த செய்தியை பார்ப்போம்....
ஈரோட்டில் நடந்த ஒரு விழாவில் நடிகரும், டைரக்டருமான வெங்கட் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நடிகை பாவனாவுக்கு நடந்த பலாத்கார சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் திரைப்பட துறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதற்காக அவமானப்பட வேண்டும். சிறுமிகளுக்கும் கூட இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

என் தந்தை போல் (கங்கைஅமரன்) எனக்கு இசை துறையில் ஆர்வம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே டைரக்டராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். கடவுள் அருளால் அது நடந்து விட்டது. என் தம்பி பிரேம்ஜி இசையமைப்பாளராக வர வேண்டும் என்று தான் எங்கள் குடும்பத்தினர் ஆசை.


எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. ரஜினிக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து நகைச்சுவை படம் பண்ணுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News