ரிஷபம் - குரோதி வருடம் வருட பலன்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்

Published On 2024-04-10 05:27 GMT   |   Update On 2024-04-10 05:35 GMT

கொள்கை பிடிப்பு நிறைந்த ரிஷப ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு வாழ்வில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த நல் வாழ்த்துக்கள்.

ஜென்ம குருவின் பலன்கள்

ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதியான குரு மே 1, 2024 முதல் ஜென்ம ராசிக்குள் நுழையப் போகிறார். உங்களுக்கு 8, 11 எனும் பணபர ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் ராசியில் நின்று தனது 5ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் ஏற்படும். வெற்றியை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடிந்து குறைந்த உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை துரத்தி மனம் நொந்த காலம் முடிந்துவிட்டது. இது அதிர்ஷ்டம் உங்களைத் துரத்தும் வருடமாக அமையப் போகிறது.

அஷ்டமாதிபதி ராசியில் சஞ்சரிப்பது விபரீத ராஜ யோகமாகும்.பூர்வீகச் சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும். புத்திர பிராப்தம் சித்திக்கும்பெற்றோர்களின் நல்லாசி கிடைக்கும். 7ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார். கூட்டுத் தொழில் செய்தவர்கள் விலகி தனித்து செயல்படலாம் அல்லது புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல சூழ்நிலை உண்டாகும்.

தொழில் உத்தியோக நிமித்தமாக இடப் பெயர்ச்சி செய்ய நேரும். குருவின் 9ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் குலதெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் மகிழ்ச்சியான நிலைக்கு அழைத்துச் செல்லும். சிந்தனை, செயல்பாட்டில் நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகும்.

தொழில் சனியின் பலன்கள்

ரிஷப ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். 10ம்மிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் தொழிலில் நிலையான வளர்ச்சியை வழங்குவார். அதன் 3ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளிநாடு செல்லலாம். வெளிநாடு செல்வதில் நிலவிய சட்ட சிக்கல், விசா பிரச்சனை சுமூகமாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு தொழில் பிரமாண்ட வளர்ச்சி ஏற்படும்.

தொழிலுக்காக விரும்பிய் கடன் தொகை கிடைக்கும். அரசு பணி தேர்வு எழுதியவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும். கண் அறுவை சிகிச்சை வெற்றி தரும். சனி 7ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். ரிஷப ராசியினர் தாத்தா, பாட்டியாகும் பாக்கியம் உள்ளது. பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். கவுரவப் பதவிகள், பெயர், புகழ், சலுகைகள் என வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். எதிரி தொல்லை, கண் திருஷ்டி பாதிப்பு விலகும்.

எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் உருவாகும். சனியின் 10ம் பார்வை நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணையையை பற்றிக் கூறும் 7ம்மிடத்தில் பதிகிறது. வாழ்க்கைத் துணைக்கு இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். கணவன், மனைவி சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடக்கும். அரசின் நலத்திட்டத்தால் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும். சுகமான ஆடம்பர வாழ்க்கை அமையும்.

பஞ்சமகேது / லாப ராகுவின் பலன்கள்

பூர்வீகம், குலதெய்வம், குழந்தைகள், அதிர்ஷ்டம் காதல் பற்றிக் கூறும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும் வழக்கு வெற்றி, லாபம் பற்றிக் கூறும் பதினொன்றாமிடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் பல்வேறு ஆசைகளால் மனம் அலைபாயும். புதிய சிந்தனைகள் உருவாகும். நிதானமாக லாபம் கொடுத்த தொழில் நிலையான நிரந்தரமான லாபத்தை வழங்கும்.பொருளாதார முன்னேற்றத்தால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கூடிய விதத்தில் வருமானம் அதிகரிக்கும். சீட்டுக் கட்டி இழந்த பணம், ஜாமீன் போட்டு ஏமாந்த பணம் கிடைத்து விடும். சுப கிரக வலுவால் வீண் நஷ்டம், பயம் தீரும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறும். உடலும் உள்ளமும் குளிரும். மன சங்கடம். இனம் புரியாத கவலை ஒழியும். அதிர்ஷ்டம். பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பங்குச் சந்தை ஆதாயம் இரட்டிப்பாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மூத்த சகோதரம், சித்தப்பா, பிள்ளைகளின் ஆதரவால் நிம்மதி பெருகும். அடமானச் சொத்து நகைகளை மீட்கலாம். புதிய சொத்து, வாகனங்கள் சேரும். வீடு கட்டி குடியேறுதல் புதிய வாகனம் வாங்குதல் என பல ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். ஆரோக்கியத்தால் நிலவிய கவலைகள் சீராகும்.வைத்தியம் பலன் தரும். படுக்கையில் வாழ்ந்தவர்கள் கூட எழுந்து நடமாட துவங்குவார்கள்.

உயர் கல்வி முயற்சி சித்திக்கும். கவுரவப் பதவி கிடைக்கும். புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். முன்னோர் சொத்திற்காக நீதிமன்றப் படி ஏறியவர்களுக்கு தீர்ப்பு சாதகமாகும். இளைய மனைவியால் ஆதாயம், அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்யை நாடியவர்களுக்கு இயற்கையாக குழந்தை உருவாகும்.

கிருத்திகை 2, 3, 4

சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை 2, 3, 4 ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் லாபகரமான வருடமாக அமையப் போகிறது.மனம் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையப் போகிறீர்கள்.காலத்திற்கும் அழியாப் புகழ் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்கை அடையும் முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டு வேலை அரசு உத்தியோக முயற்சி பலிதமாகும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.

விரும்பிய ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து சேரும். சிலருக்கு எலும்பு, நரம்பு தொடர்பான பிரச்சனைக்கு சிகிச்சை செய்ய நேரும். அழகு ஆடம்பர பொருட்கள் சேரும்.வீடு வாகன பிராப்தம் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள், உதவாக்கரைப் பிள்ளைகள் திருந்துவார்கள். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்,உடன் பிறப்புகளால் உயர்வுகள் ஏற்படும்.தந்தையால் ஏற்பட்ட உபத்திரவம் குறையும். தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்க்கவும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டு.

ரோகிணி

சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் தீரும் தமிழ் புத்தாண்டாக இந்த வருடம் அமையப் போகிறது. புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். வாழ்க்கைதுணை, கூட்டாளிகள் அல்லது நண்பர்களால் சிறு மனக்கசப்பு உண்டாகும்.

குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். மண், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும், விற்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்த சம்பந்திகள் பிள்ளைகள் நலனுக்காக கருதி அனுசரித்து செல்வார்கள். சுப விரையங்கள் அதிகமாகும். பணம், கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் குறையும்.பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதே போல உடல் நல பிரச்னைகள், நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நல்ல நிவாரணம் அடைவார்கள். நோய் தாக்கம் குறையும். போட்டிகள், பொறாமை, சங்கடங்கள் உள்ளிட்ட சாதகமற்ற விஷயங்கள் படிப்படியாக குறையக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கிருஷ்ணரை வழிபட இன்பம் பெருகும்.

மிருகசீரிஷம் 1, 2

செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த மிருகசீரிஷம் 1, 2 ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் ஆன்ம பலத்தை பெருக்கும் அற்புத வருடமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை வாழ்வில் சாதிக்க முடியாத பல விசயங்களை தற்போது சாதிப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணி நிரந்தரமாகும். வீண் அலைச்சலால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. தாய், தந்தை, தம்பி, மனைவி பிள்ளைகள் ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஒவ்வொன்றாக நிறை வேற்றுவீர்கள்.

ஆரோக்கியம், பணம் கொடுக்கல் வாங்கல், வம்பு, வழக்கு, ஜாமின் போன்றவற்றில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சொத்துக்களின் மதிப்பு உயரும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப விசேஷங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக நாட்டம் உண்டாகும். கடன் சுமை குறையும். உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கை ஏற்படுத்தலாம். அரசியல் மற்றும் பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து விநாயகரை வழிபடவும்.

பெண்கள்

தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். குடும்ப உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாளவும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. 5ல் கேது, 11ல் ராகு இருப்பதால் பல சாதகங்கள் நடந்தாலும் இனம் புரியாத மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். சிலருக்கு கை, கால் வலி அதிகமாக இருக்கும். தம்பதிகளுக்குள் நிலவிய ஈகோ பிரச்சனை சுமூகமாகும்.

திருமணம்

ராசிக்கு 7ம்மிடமான களத்திர ஸ்தானத்திற்கு சனி மற்றும் குருவின் பார்வை பதிவதால் திருமண முயற்சி தாய்மாமாவின் ஆதரவால் சித்திக்கும். திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். மறுமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும்.

 பரிகாரம்:

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் உப ஜெய ஸ்தானமான 11ம்மிட ராகுவினால் இந்த ஆண்டு முழுவதும் சுப பலன்கள் உண்டாக நீங்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ஸ்ரீ ரங்கம். ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் "திருவரங்கம்" என இத்தலம் அழைக்கப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பாடிய 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் தலைசிறந்த தாகவும் கருதப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் பாற்கடலில் பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட இறைவனான பெருமாள் ரங்கநாயகர். தாயார் ரங்கநாயகியை வழிபட பிறவிப்பிணி நீங்கி குரோதி வருடம் வளம் பெருகும் ஆண்டாக பலன் தரும்.

Similar News