ரிஷபம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:15 GMT   |   Update On 2023-12-19 05:17 GMT

பத்தாமிடத்தில் சனி! முத்தான தொழில் அமையும் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். ஆதாயம் ஏட்டில் இருக்குமே தவிர எதிரில் இருக்காது. கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மற்றவர்களை நம்பி செயல்பட இயலாது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 9, 10 -ம் இடத்திற்கு அதிபதியானவர் சனி பகவான். பாக்கிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி என்பதால் எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். தன் சொந்த வீட்டில் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியால் அனைத்து வழிகளிலும் நன்மை ஏற்பட்டாலும் பெற்றோரின் உடல் நலத்தில் மட்டும் கவனம் தேவைப்படும் நேரமிது.

தொழில் ஸ்தான சனி!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே, தொழிலில் நிலையான வருமானத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கப் போகின்றார். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும், நல்ல மாறுதல்களும் கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பூமி, கல்வி, சுகம், தாய், வீடு, வியாபாரம், களத்திரம், விரயம், பயணம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனியின் பார்வை பதிவதால் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். பயணங்கள் பலன் தரும். வீடு கட்டும் யோகம் உண்டு.

சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம்.வெளிநாட்டு அழைப்புகளும் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். இட மாற்றம், ஊர் மாற்றம் உத்தியோக மாற்றம் வரலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது உத்தமம். அண்ணன், தம்பிக்குள் இருந்த வாக்கு வாதங்கள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிநாட்டு யோகமும், அங்குள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பும் கூட வந்து சேரும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது(20.12.2023 முதல் 21.2.2024 வரை) திருமண வாய்ப்புகள் கைகூடும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சப்தம-விரயாதிபதியின் காலில் சனி சஞ்சரிப்பதால் சேமிப்பில் கொஞ்சம் கரையலாம். இருப்பினும் அவை குடும்ப முன்னேற்றம் கருதியே செலவிடப்படும். இடம், பூமி சேர்க்கை, வீடு கட்டும் யோகம், கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகமும் உண்டு. பழைய வாகனங் களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் விரிசல்கள் அகன்று உறவு பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து 'சுயதொழில் தொடங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்த வாக்கு வாதங்கள் மறையும். தொழில் வளர்ச்சியை முன்னிட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவுகள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். பிள்ளைகள் தன்னிச்சையாக செயல்படத்தொடங்குவது மனக்கவலையை அதிகரிக்க வைக்கும். பயணங்களால் அலைச்சல் இருக்குமே தவிர ஆதாயம் இருக்காது. பங்குச் சந்தை வியாபாரம் செய்பவர்களுக்கு கவனம் தேவை. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரமிது. கூட்டுத்தொழில் செய்வோர் பங்குதாரர்களின் தொல்லைக்கு ஆட்பட நேரிடும்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். அவர் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். வீண்விரயங்களிலிருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் மூலம் கேட்ட சலுகைகளும் கிடைக்கும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது வருமானம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். மறைமுகப்போட்டிகள் அகலும். உங்கள் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தீர்த்த யாத்திரைகளிலும், தெய்வ வழிபாடுகளிலும் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றிகிடைக்கும்.

ராகு - கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதன் விளைவாக தொழில் ஸ்தானம் புனிதமடைவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும். உத்தியோகத்தில் தடைப்பட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி பகவானை வழிபடுவ தோடு பிரதோஷ வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக தஞ்சை பெரியகோவில் நந்தியை வழிபட்டு தடைகள் அகல வழிவகுத்துக் கொள்ளுங்கள்.

Similar News