விருச்சகம் - ஆண்டு பலன் - 2024

புத்தாண்டு ராசிபலன்கள்-2024

Published On 2023-12-29 10:04 GMT   |   Update On 2023-12-29 10:07 GMT

விருச்சிகம்- அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும்

உதவி செய்வதில் உயர்ந்த விருச்சிக ராசியினரே விரும்பியதை மன பலத்தால் அடையும் தைரியம் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்களின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. சனி பகவான் அர்தாஷ்டமச் சனியாக பலன் தர உள்ளார். ஏப்ரலுக்குப் பிறகு ராசிக்கு குருப்பார்வை கிடைக்க உள்ளதால் தடைகள் தகன்று எதிர்பார்த்த அனைத்து சுப பலன்களையும் அடையமுடியும்.

குருவின் சஞ்சார பலன்கள்

ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 21 வரை குருபகவான் 6-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் வேலையில் விரும்பிய மாற்றம் கிடைக்கும்.அரசு உத்தியோக வாய்ப்பு சித்திக்கும். நோய்க்கான சிகிச்சை பலன் தரும். எதிரிகள் தாமே விலகுவார்கள். ஏப்ரல் 21 அன்று களத்திர ஸ்தானமான 7-ம் மிடத்திற்குச் செல்லும் குரு பகவான் 5-ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 9ம் பார்வையால் முயற்சி, சகாய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். நல்ல செய்திகள் தேடி வரப்போகிறது. வைத்தியச் செலவு குறையும்.

முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற தடைபட்ட சுப நிகழ்வுகள் நடக்கும். வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு உள்ளது. பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனதளவில் உற்சாகமாகவும், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

சனியின் சஞ்சார பலன்கள்

ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தந்தாலும் 3,4ம் அதிபதி சனி 4ல் ஆட்சி பலம் பெறுவதால் மனதில் உற்சாகம் பிறக்கும். மனத்தடுமாற்றம் பய உணர்வு அகலும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாகனங்கள் சேரும்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். தாயின் மூலம் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளின் மனக்கவலை அகலும். சனி பகவான் 3ம் பார்வையால் ருண ரோக சத்ரு ஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன் தொல்லைக் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். 7ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் தொடர்பான இழுபறியான விசயங்கள் சித்திக்கும். அரசின் ஆதரவு மானியம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். 10ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். முக்கிய செயல்களில் நன்மை தீமை அறிந்து முடிவு எடுப்பது நல்லது. போதிய பண வரவு இருந்தாலும் எதிர்பாராத செலவும் இருக்கும். ஏப்ரலுக்குப் பிறகு ராசியை குரு பார்ப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய மனபலம் உண்டாகும்.

ராகு கேது சஞ்சார பலன்கள்

5ல் ராகுவும் 11ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். 5ல் உள்ள ராகு பகவான் ஆட்சி பெற்ற குரு பகவானைப் போலவே செயல்படுவார். அனைத்து துறையினருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு, திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். பங்குச் சந்தை ஆதாயம் பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். பூர்வீகச் சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம் இது.

பிள்ளைகள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு உயர் கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர் பாலினத்தவரிடம் தேவையறிந்து பழகவும். காதல் விவகாரங்கள் வம்பு, வழக்கில் முடியும்.கடந்த சில ஆண்டு காலமாகவே கஷ்டத்தில் தவித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ம் ஆண்டு நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

விசாகம் 4

மனக் கட்டுப்பாடு கூடும். ராசிக்கு குருப்பார்வை கிடைப்பதால் மன சஞ்சல மிகுதியால் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்த மனம் கட்டுப்படும். எவை நல்லவை, எவை தீயவை என மனதால் பகுக்க முடியும். உங்களை ஏளனம் பேசியவர்கள் எல்லாம் புகழ்வார்கள் .தன் நம்பிக்கையும் தைரியமும் மிகுதியாகும்.தோற்றப் பொலிவு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும்.

எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் தேவையில்லாத மன சஞ்சலம் உருவாகலாம்.உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் .புதிய தொழில் முயற்சி வெற்றி அடையும். வீட்டில் சுபமங்கள காரியங்களால் தாராளமான பணச் செலவுகள் ஏற்படும். புதிய வீடு கட்ட வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று வெள்ளெருக்கு மாலை சாற்றி விநாயகரை வழிபடவும்.

அனுஷம்

முயற்சிகள் வெற்றியடையும். ராசியை குரு பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலக் கோளாறுகள் சீராகும். இறை வழிபாட்டில் மகிழ்ச்சி அடைவீர்கள். திறமையால் உங்களைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்துவீர்கள்.வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.புத்திர பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும்.சொத்துக்களினால் வருமானம் உண்டு.

தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைவாக நிறைவேறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொலைத்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.வர வேண்டிய பணம்வரும். சங்கடஹர சதுர்த்தியன்று மஞ்சள் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

கேட்டை

தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்வீர்கள். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ராசியை குரு பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். தாய், தந்தையின் அன்பு,ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். வீடு, வாகன யோகம்,குழந்தை பாக்கியம், பிள்ளைகளின் சுப காரியம் வெளியூர், வெளிநாட்டு தொழில் வேலை வாய்ப்பு என பலவிதமான பாக்கிய பலன்களும் கிடைக்கும்.

ஆலயத் திருப்பணி, குரு உபதேசம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். கை விட்டுப் போன சொத்துக்கள் கைவசமாகும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள்.முன் கோபத்தைக் குறைத்துப் பொறுமையோடு செயல்பட வேண்டும்.சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

திருமணம்

தடைபட்ட திருமணம் நடக்கும். காதல் கலப்புத் திருமணம் அதிகரிக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து இரண்டாம் திருமணத்திற்கு வரன் பார்பவர்களுக்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். 40 வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.

பெண்கள்

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீண் பேச்சை குறைப்பதால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம்அதிகரிக்கும் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும்.நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள்.

வியாபாரிகள்

சுமாராக இருக்கும் தொழில் கூட சூப்பர் தொழிலாகும்.இழுத்து மூடிவிட்டு செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பு அடையும். தொழில் மேன்மைக்கு அளப்பரிய புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவீர்கள்.கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களாக இருந்தால் உங்களின் மூத்த சகோதரர் உழைப்பை தராமல் லாபத்தை மட்டும் எடுத்து செல்வார். கணக்கில் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது .நிர்வாக கணக்கில் குழப்பம் செய்து கூட்டுத் தொழில் பிரியும் வாய்ப்புள்ளது.

உத்தியோகஸ்தர்கள்

வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும். வேலையை தக்க வைக்க கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும். அடிமட்ட ஊழியர்களை இது பாதிக்காது.அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்

5ம்மிடம் பதவி ஸ்தானம் என்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். பொது வாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் மிகும்.அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் அடிக்கடி கட்சி மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். வம்பு, வழக்கைத் தவிர்த்தல் நல்லது.

பரிகாரம்

வெற்றிலை, பாக்குடன் பேரிச்சம்பழம், தேன் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட, குலதெய்வம் முருகனை வழிப்பட்டால் துயரம் தீரும்.

Similar News