விருச்சகம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
null

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

Published On 2026-03-05 10:40 IST   |   Update On 2026-03-05 11:07:00 IST

கம்பீரமான விருச்சிக ராசியினரே

விருச்சிக ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 11ம் மிடமான லாபஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்ப்பார் .ஐந்தாம் இடம் என்பது பதவி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானமாகும். உங்களை மனக் குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும்.உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு பலன் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைத்தற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும்.ஞான மார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்த யாத்திரை , கோவில்களுக்கு செல்ல ஆர்வம் ஏற்படும்.

பஞ்சம சனியின் பொதுவான பலன்கள்

சனி பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை வழங்க இருக்கிறார். செல்வாக்கை உயர்த்தி தரும் சனிப் பெயர்ச்சியாக அமையப் போகிறது.எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் செயலிலும் பேச்சிலும் அறிவு மேம்படும்.இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.மனம் மகிழும் சம்பவம் நடைபெறும்.

தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும்.கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும்.சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம் அல்ல.

உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வாலிப வயதில் தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள். இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஓடி வரும் . பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உங்களின் குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.

சனியின் 3ம் பார்வை பலன்கள்

சனியின் 3ம் பார்வை ஏழாமிடமான களத்திர ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருபணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும் . பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும். ஒரு சிலருக்கு கவரவப் பதவிகள் தேடி வரும். இது வரை பணம் சம்பாதிக்கும் ஆர்வம் மிகுந்த அரசியல் வாதிகள் கூட தியாக மனப்பான்மை மிகுந்த அரசியல்வாதியாக மாறுவார்கள்.

திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். அவர்களிடம் ஒற்றுமையும் அன்னியோன்யமும் மிகுதியாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும்.

சனியின் ஏழாம் பார்வை பலன்கள்

சனியின் 7ம் பார்வை 11ம்மிடமான லாபஸ்தானத்திற்கு இருப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு வசந்த காலம். விவசாயம் செழிப்படையும். அரசின் மானியம் உதவிகள் தேடி வரும். இது வரை கட்ட முடியாமல் திணறி வந்த விவசாயக் கடன் தள்ளுபடியாகும். புதிய கால்நடைகள் வாங்குவீர்கள். தொழிலில் வரா கடன் ஏற்பட்டு வராது என்று நினைத்த கடன் தொகை வசூலாகும். உங்களின் மூத்த சகோதர சகோதரிகளிடம் இருந்து எதிர்பாராத தனவரவு, உயில் சொத்து தேடி வரும். புதிய தொழிலில் கிளைகள் உருவாக்க அற்புதமான நேரம். போட்டி, பந்தயங்கள் உங்களுக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தரும். அரசாங்க ஊழியர்கள் சிலர் விருப்ப ஓய்வு பெறலாம். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனி பகவானின் 10ம் பார்வை ராசிக்கு 2ம்மிடமான தன ஸ்தானத்திற்கு இருப்பதால் தன வரவு மகிழ்வைத் தரும். கடன் இல்லா நிம்மதியான வாழ்விற்கு சனி பகவான் உங்களை அழைத்துச் செல்லும் நல்ல நேரம். அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும். வருமானம் பல மடங்கு பெருகும். தொழில்,வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த தடைகள் விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சனியின் காரகத்துவ தொழில்களான இரும்பு, நிலக்கரி, எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் , நவதானியம் பழைய பொருட்கள் போன்ற தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

புதிதாக சில்லரை வியாபாரம் துவங்குபவர்கள் பெரும் பலன் அடைவார்கள். சில்லரை வியாபாரிகள் பலர் மொத்த விற்பனையில் ஆர்வம் காட்டுவார்கள். கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் , பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள், நீதித்துறையில் பணி புரிபவர்கள், நீதியரசர்கள், சட்ட வல்லுனர்கள், பணம் புரளும் தொழில்களான சீட்டு நடத்துபவர்கள் பெரும் பலன் அடைவார்கள்.உயர்த்த நிலைக்கு உயர்த்தும் சனி பகவான் சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்தால் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்துவார். வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது.

திருமணத் தடை அகலும். திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும்.இது வரை வரன் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும்.காதல் மலரக் கூடிய ஒரு காலம். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரமாகும். சிலர் மதம் மாறி கலப்பு திருமணம் செய்வார்கள். உங்கள் மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். வீட்டுப் பெரியவர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும்.மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் பொருளாதார நெருக்கடியை ஈடு செய்யும் விதத்தில் வருமானம் கிடைக்கும்.விருந்து உபசாரங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்து டன் கலந்து கொள்வதன் மூலம் பல மகிழ்ச்சியான அனுபவங்கள், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.பேச்சில் நிதானம், தைரியம் தெம்பு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக சிரமம் எடுக்க நேரும் என்றாலும் உங்கள் பேச்சுத் திறமையால் பாதகத்தையும் சாதகமாக மாற்றி விடுவீர்கள் ஒரு சிலருக்கு வலது கண்ணில் சிறு பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரும். கணவரிடம் இருந்து ஆடை, ஆபரணம், விலை உயர்ந்த சொகுசு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பரிகாரம்

குலதெய்வ வழிபாடு உங்களை நன் முறையில் வழி நடத்தும். தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News