தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:36 GMT   |   Update On 2023-12-19 05:42 GMT

ஏழரைச் சனி விலகியது! இனிய வாழ்க்கை இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை, 2.7.2025 முதல் 18.11.2025 வரை இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் குடும்பப்பிரச்சினைகள் தலைதூக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உற்றார், உறவினர் வழியில் மனக்கசப்பு உருவாகும். ஊர் மாற்றங்களால் நிம்மதி கிடைக்காது. மிகுந்த கவனம் தேவைப்படும் நேரமிது. பொருளாதாரப் பிரச்சினையும் தலைதூக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 முதல் 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்திற்குச் செல்கின்றார். ஏழரைச்சனி விலகி விட்டது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கப் போகின்றது. மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தங்கு தடைகள் தானாக விலகும். தனவரவும் திருப்தி தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவான் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்ல வைக்கப் போகின்றார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 5, 9, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், விரய ஸ்தானம் ஆகியவை புனிதமடைகின்றது. எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தொழில் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்குச்சந்தை மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வீடு மாற்றமும், இட மாற்றமும் எதிர்பாராமல் வந்து சேரும். ஒரு சிலருக்கு நாடு மாற்றம் வந்து நன்மை தரும். எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நேரமிது. வீட்டுத் தேவைகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் நனவாக வழிபிறக்கும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது(20.12.2023 முதல் 21.2.2024 வரை) செவ்வாய் உங்கள் ராசிக்கு பஞ்சம- விரயாதிபதி என்பதால் பிள்ளைகள் வழியில் பெரும் விரயம் ஏற்படலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளி மாநிலம், வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் கல்யாண சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் அக்கறை செலுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். 'வாங்கிய சொத்துக்களை விற்றுவிட்டோமே?' என்று கவலைப்பட்டவர்களுக்குப் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

உடல் நலத்தில் கவனம் தேவை. உள்ளத்தில் உள்ள எண்ணங்களை உடனடியாக செயல்படுத்த இயலாது. இடம் வாங்கிய வகையில் பிரச்சினை உருவாகும். கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கக்கூடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. 'கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். ரண சிகிச்சை செய்வதாகச் சொன்ன மருத்துவர்கள், சாதாரண சிகிச்சையிலேயே உங்கள் நோயைக் குணப்படுத்தி விடுவார்கள். மற்றவர்களை நம்பி செய்த காரியம் நல்லவிதமாக முடியும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு வரும் குரு அதன் பார்வை பலத்தால் நற்பலன்களை வழங்கினாலும், மனநிம்மதிக்குறைவு அதிகரிக்கும். 'ஆறில் குரு ஊரில் பகை' என்பது பழமொழி. எனவே வரும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடன் நேருக்குநேர் நன்றாகப் பேசுபவர்கள் கூட மறைமுகமாக சில குறுக்கீடுகளை உருவாக்கலாம். எனவே யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. தொழில் பங்குதாரர்கள் விலகிச்செல்வதாகச் சொல்வர். உத்தியோகத்தைப் பொறுத்தவரை மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நற்பலன்கள் உங்களை நாடிவந்து சேரும். உடல் நலம் சீராகும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். 'மலை போல் வந்த துயரங்கள் பனி போல் விலகும் நேரமிது'. கல்யாணக் கனவுகள் நிறைவேறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், வீடு மாற்றங்கள் உறுதியாகும். உத்தியோகத்தில் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கலாம்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் துணையாக இருப்பர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இடமாற்றங்கள், மகிழ்ச்சி தரும் விதத்தில் அமையலாம். வழக்குகள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். விரயத்திற்கேற்ற வருமானம் உண்டு.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக திருநள்ளாறு சென்று காக வாகனச் சனி பகவானை கை தொழுது வழிபட்டால் தேக நலனும் சீராகும். செல்வ நிலையும் உயரும்.

Similar News