தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2023-01-13 13:34 GMT   |   Update On 2023-01-13 13:35 GMT

இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் நின்ற சனி பகவான் 3ம் மிடமான சகாய ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 12ம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார்.

சகாய ஸ்தான சனியின் பலன்கள்: தனுசு ராசிக்கு சனி பகவான் 2 ,3ம் அதிபதி.மூன்றாமிடம் என்பது சகாய ஸ்தானம். இளைய சகோதர ஸ்தானம். முயற்சி திட்டமிடுதல் வெற்றி ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். ஏழரைச் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து உப ஜெய ஸ்தானமான 3ம் இடத்திற்கு சனி பகவான் செல்வதால் தனுசு ராசியினருக்கு மிகப் பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் இந்த ஏழரை ஆண்டுகள் பட்ட கஷ்டத்திலிருந்து விடுதலை என்றால் மகிழ்ச்சிக்கு காரணம் கேட்கவா வேண்டும். அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கி விட்டது. ஆயுள் ஆரோக்கியம் சீராகும். பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களை பொற்காலத்திற்கு அழைத்துச் சென்று அழியாத புகழை உங்களுக்கு தரப்போகிறது. உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உடல், முகத்தில் தோற்றப் பொழிவு ஏற்படும். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகுவார்கள். வாகன யோகம் சித்திக்கும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். புத்திர பாக்கியம் ஏற்படும். இந்த கால கட்டத்தில் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள்.

3ம் பார்வை பலன்: சனியின் 3ம் பார்வை 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இருப்பதால் சாஸ்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் மிகும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில், வெளி மாநிலத்திலிருந்து பூர்வீகம் வர முடியாமல் தவித்தவர்கள் பூர்வீகம் வந்து உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத்தான் செய்யும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும்.

7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை தடைபட்ட நீத்தார் வழிபாட்டை செய்து முடிப்பீர்கள். காசி, ராமேஸ்வரம், அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பலம் பெறச் செய்வீர்கள். கோவில் திருப்பணிகளை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்த்தனைகள், வழிபாடுகள் பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை, பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். ஏழரைச் சனியின் காலத்தில் கற்ற அனுபவ பாடம் உங்களுடன் பயணம் செய்யும். மாணவர்களுக்கு கல்லூரி உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.

10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 12ம் இடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் சுப விரயச் செலவுகள் அதிகரிக்கும். மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும். மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும். சிலருக்கு வைத்தியச் செலவு அதிகரிக்கும்.பிள்ளைகளிடம் கோபித்து கொண்டு முதியோர் இல்லம் சென்ற பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். ஏழரை சனியின் காலத்தில் கடனுக்காக தலைமறைவாக வாழ்ந்தவர்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்தவர்கள் விடுபடுவார்கள். நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவிப்பவர்கள் நன் நடத்தை காரணமாக விடுவிக்கப்படுவார்கள்.துக்கம் மிகுதியால் தூக்கத்தைத் இழந்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

தனுசு ராசிக்கு 5,12ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும். உங்கள் இன, மத இயக்கங்களின் முதன்மை பதவியும், கவுரவமும் தேடி வரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் . பலர் சொந்த ஊருக்கு அல்லது சொந்த ஊருக்கு அருகில் பணி மாற்றம் கிடைக்கும். காவல்துறை, ராணுவத்தில் பணிபுரிவர்களுக்கு அதிக அளவிலான பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் செலவுகளை கட்டுக்குள் வைத்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.

சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 5ம்மிடத்திலும் அதன் பிறகு ராசிக்கு 4ம்மிடத்திலும் சஞ்சரிக்கும் கோட்சார ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எப்போது விடிவு காலம் வரும் என்று காத்து இருந்த உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. விற்கப்பட வேண்டிய சொத்தாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும். தாய் வழி உறவினர் மூலம் தன வரவு இரட்டிப்பாகும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும்.தனுசு ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவி தேடி வரும்.கடன் தொல்லையிலிருந்து சிறிது சிறிதாக மீள்வீர்கள்.

17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் தொழில் ஆரம்பித்து கால் ஊன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைக்கு நிறைந்த வருமானம் கிடைக்கும்.பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையை ஒத்தி வைப்பது நல்லது. பங்கு வர்த்தகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது அவசியம். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் செல்வார்கள். அடமானச் சொத்து, நகைகளை மீட்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். சிலர் பெற்றோருடன் கருத்து வேறுபாட்டால் தனிக் குடித்தனம் செல்வீர்கள்.

பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

தனுசு ராசிக்கு ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். ரியல் எஸ்டேட் கட்டுமானப் பணி , சுரங்கத் தொழில் வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்கள் டெக்ஸ்டைல் தொழில் , மருத்துவர்கள் போன்றவர்களுக்கு பொன்னான நேரம். இவர்களுக்கு அரசின் சலுகைகள் , மானியங்கள் எளிதில் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் விலகிய குடும்ப உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்பு, சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டும் . புதிதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும்.வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும். புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சிலருக்கு சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெறும் எண்ணம் தோன்றும்.சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு பயணம் செல்லலாம்.

திருமணம்: தனுசு ராசியைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலருக்கும் திருமணத் தடை இல்லை. அனைத்து கோட்சார கிரகங்களும் சாதகமாக உள்ளதால் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் நல்லாசியுடன் திருமணம் நடக்கும். மறுமண முயற்சி பலிதமாகும். உடனே புத்திர பிராப்த்தம் உண்டாகும்.

பெண்கள்: கருத்து வேறுபாடுடன் வாழ்ந்த தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும் போது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்: 3,6,11ம் இடங்கள் சனி பகவானுக்கு உகந்த ஸ்தானம். தைரியத்துடன் வீரத்தைக் கொடுக்கும் ஸ்தானம். அழியாப் புகழையும் பெருமையையும் கொடுக்கும் ஸ்தானம். தெய்வ பலம் மனித பலத்தை விட உயர்ந்தது என்பதை சனிபகவான் புரிய வைப்பார்.சனிக்கிழமை அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களள் விதவைகளின் தேவையறிந்து உதவி செய்யுங்கள். சனிக் கிழமை வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News