மீனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:47 GMT   |   Update On 2023-12-19 05:50 GMT

பனிரெண்டாமிடத்தில் சனி! பணவிரயம் தான் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார் இக்காலத்தில் வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் தான் பூர்த்தியாகும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் வரலாம். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளிநாடு சென்றவர்கள் அது கிடைக்காமல் தாய்நாடு திரும்பும் சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்க மாட்டார்கள்.

மீன ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 12-ம் இடத்திற்கு வருகின்றார். ஏழரைச்சனி தொடங்கிவிட்டது. இருந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பவர் சனி பகவான். எனவே லாபத்தையும் கொடுத்து விரயத்தையும் கொடுப்பார். உங்கள் ராசிக்கு முதல் சுற்றாகவோ, 3-வது சுற்றாகவோ இருந்தால் சிரமங்களையும், தொல்லைகளையும் கொடுப்பார். 2-வது சுற்றாக இருந்தால் இனிய பலன்கள் கிடைக்கும். இருப்பினும் இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக சுபச் செலவுகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறையும். ஏழரைச்சனியின் ஆதிக்கம்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சனி பகவான் வருகின்றார். எனவே ஏழரைச்சனி ஆரம்பமாகின்றது. விரயச் சனி இப்பொழுது வந்திருக்கின்றது. இதற்குப் பிறகு ஜென்மச்சனி, அதற்குப் பிறகு குடும்பச்சனி என்று வரும். பொதுவாக விரயச்சனி காலத்தில் அமைதியாக செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்கநிலையும், தெளிவற்ற மனதுடன் செயல்படும் சூழ்நிலையும் ஏற்படும். இடமாற்றம், ஊர்மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால் தனவரவு தாராளமாக வந்து சேரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்குவீர்கள். சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தொழிலைப் பொறுத்தவரை புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். எதிரிகள் விலகுவர்.

வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம். பணிபுரியும் இடத்தில் பல நாட்களாக இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிணக்குகள் ஏற்பட்டு பிறகு இணக்கம் வரும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களை விற்று விட்டு, புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டும் என்ற ஆர்வம் கைகூடும். தேவைகள் பூர்த்தியானாலும் கூட சில சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த விரிசல் அகலும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) சகோதர சச்சரவுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் தக்க விதத்தில் கை கொடுக்கும். வீடு கட்ட வேண்டும், கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது கைகூடும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் இணைவர். பொருளாதார நிலை உயரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நிதி நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சிக்கு உதவி கிடைக்கும். நீண்ட காலத்திட்டங்கள் நிறைவேறும். அலுவலகப் பணிகளில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். வாகனப் பழுதுகளால் மாற்றம் கண்ட நீங்கள் புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

நல்ல சம்பவங்கள் நாளும் நடைபெறும். தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். வருமானம் உயரும். பெருமைக்குரிய சான்றோர்கள் உங்களுக்கு அறிமுகமாவர். தொழில் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் இதுவரை கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும் நேரமிது.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது வெற்றிகள் உங்களைத் தேடிவரப்போகின்றது. வேற்று மனிதர்களின் ஒத்துழைப்பின் மூலம் கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும். மங்கல ஓசை மனையில் கேட்க எடுத்த முயற்சிகள் பலன்தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அடிப்படை வசதிகள் பெருகும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல்கள் கிடைக்கலாம். முன் னோர்கள் கட்டிவைத்த ஆலயப் பணி களைத் தொடருவீர்கள். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கல்யாணம், காது குத்து போன்றவை நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

ராகு- கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகலாம். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் ஒருசில சமயங்களில் கைமாற்று வாங்கும் சூழ்நிலை வரலாம்.

6-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. நூதன வியாதிகளின் தாக்கங்கள் வரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களாலும் பிரச்சினை ஏற்படும். ராகு-கேதுக்குரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டால் தாக்கங்கள் அகலும்.

வெற்றி பெறவைக்கும் வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் வைரவன் பட்டியில் வீற்றிருந்து அருள் வழங்கும் மார்த்தாண்ட பைரவரை வழிபட்டு மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

Similar News