துலாம் - குரோதி வருடம் வருட பலன்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்

Published On 2024-04-10 06:18 GMT   |   Update On 2024-04-10 06:29 GMT

முன்னேற்றமான வருடம்! நேர்மையான துலாம் ராசியினருக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு, மனதை மகிழ்விக்கும் முன்னேற்றமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள்

அஷ்டம குருவின் பலன்கள்

துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதியான குருபகவான் மே 1, 2024 முதல் அஷ்டம ஸ்தானம் செல்கிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்.ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவது உன்னதமான அமைப்பு. துலாம் ராசிக்கு கெட்டவனான குரு மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வந்து விடும்.

அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை அயன, சயன, விரய ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் வெளியூர் வெளிநாட்டு பயணம் ஏற்படும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணவசதி சிறப்பாக இருக்கும். சுப கோள்கள் மறைவு ஸ்தானத்தை பார்த்தால் சுப விரயங்கள் கூடும்.

வரவிற்கு ஏற்ற விரயமும் இருக்கும். வீடு வாகன யோகம், திருமணம், பிள்ளைகளின் கல்வி என விரயத்தை புத்தி சாதுர்யத்தால் சுபமாக மாற்ற முடியும். சுகமான சொகுசான படுக்கையில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.

குருவின் 7ம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் குடும்பத்தில் குதூகலமான சம்பவங்கள் ஆடம்பர விருந்து உபசாரங்கள் நடக்கும். இது வரை பேசாமல் இருந்த உறவுகள் அன்பு காட்டுவார்கள். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள்.

வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். சுய ஜாதக ரீதியாக குரு தசை நடப்பவர்களுக்கு வெளிநாட்டு பணம் குவியும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

குருவின் 9ம் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் அறுவை சிகிச்சையில் குணமாக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறிய நோய் கூட எளிய வைத்தியத்தில் சீராகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உங்களின் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவீர்கள். புதிய சொத்துக்கள் உயர் ரக வாகனங்கள் சேரும்.

பஞ்சம சனியின் பலன்கள்:

துலாம் ராசிக்கு 4, 5 ம் அதிபதியான சனி 5ல் ஆட்சி பலம் பெறுவது துலாம் ராசிக்கு பலம் சேர்க்கும் அமைப்பாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனி பகவான் வாழ்வில் தடைபட்ட அனைத்து இன்பங்களையும் அடையச் செய்வார்.குல தெய்வ கடாட்சத்தை ஏற்படுத்துவார். குல தெய்வம் பூர்வீகம், பூர்வீகச் சொத்து பற்றிய தகவல் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் ஏற்படும். கருப்பை குறைபாடு காரணமாக குழந்தை பாக்கியம் தாமதமாகிக் கொண்டு இருந்தவர்களுக்கும், செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடியவர்களுக்கும் இயல்பாகவே குழந்தை பிறக்கும். சனி பகவானின் 3ம் பார்வை 7ம்மிடத்தில் பதிவதால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.

கோவில் கட்டுதல், கும்பாபிசேகம் செய்தல், அல்லது பொதுக்காரியங்களில் ஈடுபடுதல் ஆகிய நற்பலன்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்னேற்ற மடையும். சனி பகவானின் 7ம் பார்வை ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். கிரகங்களின் இயக்கம் சாதகமாக உள்ளதால் பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.

அடமான சொத்துக்கள், பொருட்கள் வீடு வந்து சேரும் அரசியல் வாதிகளுக்கு ஆதாயமான காலம். ஆரோக்கிய தொல்லைகள் சீராகும்.

சனி பகவானின் 10ம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. சாமர்த்தியமாகப் பேசுவீர்கள். தொழிலை வாக்கு சாதுர்யத்தால் மேன்மைப்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு மருமகள், மருமகன் பேரன், பேத்தி போன்ற புதிய உறவுகள் வருகை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள்.

6ல் ராகு 12ல் கேது:

6ம்மிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம், உத்தியோகம் பற்றிக் கூறுமிடம். 12ம்மிடம் என்பது அயன, சயன ஸ்தானம், விரைய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டுப் பயணம், தலைமறைவு வாழ்க்கை பற்றிக் கூறுமிடம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது நல்லது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். இது பலவிதத்தில் உங்ளுக்கு கைகொடுக்கும். ஆனால் இதில் சில அசவுகரியங்களும் உண்டு.

6ம்மிடத்தில் நிற்கும் ராகு இதுவரை நிலையான நிரந்தரமான வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பார். தொழில், உத்தியோகத்தில் நிலவிய தாமதம், மந்த நிலை அகலும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் தொடர்பான விசயத்தில் ஆர்வம் குறைப்பது நல்லது. லஞ்சம் கொடுத்து வேலை வாங்க முயற்சிப்பதை தவிர்க்க வேண்டிய நேரம்.

தொழிலுக்கு, வீடு, வாகனத்திற்கு, வீட்டில் நடைபெறும் சுப விசேஷத்திற்குத் தேவையான நிதியை கடன் மூலமாக திரட்டித் தருவார்.

சிலருக்கு தொழில் ஜாமீன், குடும்ப தேவை நிறைவேற்றுதல் போன்றவற்றின் மூலம் கடனை அதிகப்படுத்தலாம். இது வரை நோயால் அவதிப்பட்டவர்களுக்கு நோயின் தன்மையை புரிய வைப்பார். நோய் இல்லாதவர்களுக்கு சிறு நோய் தாக்கத்தை ஏற்படுத்துவார். எந்த விதமான போட்டி பந்தயங்களாக இருந்தாலும் வெற்றி நிச்சயம். 12ம்மிட கேது பாவம், புண்ணியம், முக்தி, மோட்சம் ஆன்மீகம் பற்றி சிந்திக்க வைப்பார்.

தேவையற்ற எண்ண ஓட்டத்தில் தூக்கம் சற்று குறைவுபடும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு வெளிநாட்டு குடியுரிமை திடைக்கும். சிலருக்கு வரவிற்கு மீறிய செலவினால், தேவையற்ற விரயத்தால் எதிர்காலம் பற்றிய சிந்தனை மற்றும் பய உணர்வு கூடும்.

வியாபாரம் சார்ந்த விசயத்தில் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

சித்திரை 3, 4:

செவ்வாய் பகவானின் சித்திரை 3, 4ம் பாதம் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு முன்னோர்களின் நல்லாசியையும், குல தெய்வ அருளையும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான வருடம்.நினைப்பதும், நடப்பதும் முரண்பாடாக இருந்த நிலை மாறும். பாக்கிய பலத்தால் நடப்பதை எதிர்கொள்ள முடியும் புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும். காதல் பிரச்சனைகள் அவமானத்தில் முடியும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் இருந்தால் விற்றுத் தீரும்.

உயில் எழுதுவதற்கு உகந்த காலம். இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும். திருமண முயற்சி சாதகமாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. எதிலும் நிதானத்துடன் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். பழநி முருகனை வழிபட நினைத்தது நடக்கும்.

சுவாதி:

ராகுவின் சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடத்தில் நினைப்பதை உடனே நடத்த முடியும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள் வாக்கு வன்மை பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.

அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் சாதகமான பலன் உண்டு. அடிமைத் தொழிலில் இருக்கும் சிலருக்கு சொந்தத் தொழில் ஆர்வம் பிறக்கும்.திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு.

பழைய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை மீண்டும் தலை தூக்கும். சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். சிலர் வீட்டை புதுப்பிக்கலாம். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.

பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும். தன வரவில் சாதகமான நிலை உண்டு. நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் சொத்து வாங்க பண உதவி கிடைக்கும்.திருமணம் கூடி வரும். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபட நல்லது நடக்கும்.

விசாகம் 1, 2, 3:

குருவின் விசாகம் நட்சத்திரம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வருடமாகும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும்.

புதிய எதிரிகள், நோய் தாக்கம் உருவாகும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும்.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும்.

பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம்.திருமணக் கனவு நினைவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும்.உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு.அழகு, ஆடம்பர பொருட்கள் அதிகமாக கிடைக்கும்.

சொத்துச் சேர்க்கை, சொத்துக்களால் வருமானம் உண்டாகும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்ட மிடுவீர்கள். புத்திர பிராப்தம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். தினமும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

திருமணம்:

திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். 8ல் நிற்கும் குருபகவான் சம சப்தம பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் மாங்கல்ய தோஷம் அகலும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். 5ல் உள்ள சனி பகவானால் காதல் கை கூடும். மறுவிவாக முயற்சி வெற்றி தரும்.

 பரிகாரம்:

குரு மற்றும் ராகு / கேதுவால் மறைவு ஸ்தானங்கள் அதிக வலுவுடன் இயங்குகிறது. நவகிரகங்களால் ஏற்படும் கெடு பலன்கள் அகல நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் நரசிம்மர். ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும்.

Similar News