கடகம் - ஆண்டு பலன் - 2024

புத்தாண்டு ராசிபலன்கள்-2024

Published On 2023-12-29 09:53 GMT   |   Update On 2023-12-29 09:56 GMT

அன்பிற்கு அடிபணியும் கடக ராசியினருக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் வருட கிரகமான குருபகவான் 10, 11-ம்மிடங்களில் நின்று பலன் தருகிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசிக்கு 3-ல் கேதுவும் 9-ல் ராகுவும் அமர்ந்து இருக்கிறார்கள். அஷ்டமச் சனியின் காலம் என்றாலும் குரு ராகு, கேதுக்களின் நிலைபாடு சற்று சாதகமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம்.

குருவின் சஞ்சார பலன்கள்

குருபகவான் ஏப்ரல் 21, 2023 வரை தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அரசு உத்தியோகத்திற்கு முயற்சித்தவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைக்கும்.சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்து வந்த பிணக்குகள் சீராகும். சிலர் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து செல்ல நேரும். ஏப்ரல் 21-க்குப் பிறகு லாப ஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் தனது 5-ம் பார்வையால் சகாய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் 9-ம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

குரு பலம் வந்து விட்டதால் சிலருக்கு அஷ்டமச் சனியை மீறியும் திருமணம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களினால் வருமானம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் வெற்றியாக அமையும். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும். தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். குரு பெயர்ச்சி தடை, தாமதம், இன்னல்களை நீக்கி அற்புதமான பலன்களை அள்ளித்தரும்.

சனியின் சஞ்சார பலன்கள்

உங்கள் ராசிக்கு இது அஷ்டமச் சனியின் காலம். சனியின் 3-ம் பார்வை 10-ம்மிடமான தொழில் ஸ்தானத்திலும் 7-ம் பார்வை 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும், 10-ம் பார்வை 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகிறது. அஷ்டமச் சனி நடந்தாலும் குருவால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும்.புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.

உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை,நாணயம் உயரும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் விலகும்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்வீர்கள். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.கடன் சுமை குறையும். சிலருக்கு அரசின் தொகுப்பு வீடு கிடைக்கும். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும். முட்டுக்கட்டைகள் அகலும். வாழ்வின் திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும்.

ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்

இந்த ஆண்டு முழுவதும் கேது பகவான் 3-ம்மிடத்திலும் ராகு பகவான் 9-ம்மிடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். உங்களின் முயற்சிகள் உடனே பலிதமாகும். மனதில் தைரியம் குடிபுகும். இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாடு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றம் உங்களை தேடி வரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பாக்கிய ஸ்தானம் வலுப் பெறுவதால் கவுரவப் பதவிகள் தேடி வரும்.

வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். பூர்வீகச் சொத்தை அடைவதில் தடை தாமதம் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் எழும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சிலர் பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூ ரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள்.

புனர்பூசம் 4

தடைகள் விலகும்.அஷ்டமச் சனியால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கு ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம்.

திறமைக்கும், தகுதிக்கு ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் சரியாக நடந்தால் கூட சிலருக்கு நேரத்திற்கு உண்ண,உறங்க முடியாமல் வெறுமை உணர்வு இருக்கும்.மன நிறைவு இருக்காது. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன் கோபத்தில் பகைமை உருவாகும். விநாயகர் அகவல் படிக்க காரியசித்தி உண்டாகும்.

பூசம்

தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.அஷ்டமச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படாது. விரும்பிய பதவி உயர்வு தேடி வரும். பணிச் சுமை கூடும்.புதிய வேலையாட்கள் அமைவார்கள். நிரந்தர வேலை கிடைக்கும். சிலருக்கு தொழிலில் சகோதரருடன் பிரிவினை ஏற்படும். சிலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். பாகப்பிரிவினை நடக்கலாம். காணாமல் போன கை மறதியாக வைத்த ஆவணங்கள் கிடைக்கும்.

ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு பண உதவி செய்தால் திரும்ப வராது. அதுவே கணவன் மனைவி கருத்து வேறுபாடுக்கு காரணமாக அமையும் என்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் அதிகரிக்கும்.

ஆயில்யம்

கடக ராசியில் பிறந்த ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு இந்த புத்தாண்டு மங்கலத்தையும் புது மாற்றத்தையும் வழங்க உள்ளது. வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். செலவு குறையும். சேமிப்பு கூடும்.

தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் பெருகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலருக்கு புதிய நகைகள், ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும்.குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.தம்பதிகளிடம் சுமூக உறவு நிலவும்.தினமும் லஷ்மி நரசிம்மரை வழிபட மனக் கவலைகள் அகலும்.

திருமணம்

அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது.சிலருக்கு திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

பெண்கள்

பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவும் கூடும். . தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும்.சகோதரர் வகையில் வரவு உண்டு. கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

வியாபாரிகள்:

மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். ஏற்றுமதி, இறக்கு மதி தொழில் லாபகரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் வருமானம்உயரும். தொழில் கடனை குறைக்க புதிய வழிபிறக்கும். தேவைக்கு பணவசதி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். தொழில் லாபங்கள் மறு முதலீடாக மாறும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீடுகளால் சுப பலன் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்

இதுவரை அரசுவழி ஆதாயம் ,உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும்.

அரசியல்வாதிகள்

மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டீர்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பீர்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவீர்கள்.

பரிகாரம்

வெற்றிலை பாக்குடன் மாதுளம்பழம் வைத்து திங்கட்கிழமை இஷ்ட குலதெய்வம் அம்மனை வழிப்பட்டால் சுப பலன் மிகும்.

Similar News