கடகம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:21 GMT   |   Update On 2023-12-19 05:24 GMT

அஷ்டமத்தில் வருகிறது சனி! அமைதிதான் வேண்டும் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி சனி என்பதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். திடீர் இடமாற்றம் சிக்கலை உருவாக்கும். சனி அஷ்டமாதிபதியாகி வக்ரம் பெறுவதால் ஒரு சில காரியங்கள் திடீரென முடிவாகும். குறிப்பாகப் பிள்ளைகளின் கல்யாணம், பெற்றோரின் மணி விழாக்கள் நடைபெற்று சுபவிரயங்களை உருவாக்கும். வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உண்டு. மற்றவர்களை நம்பி செய்த காரியங்கள் நடைபெறாமலும் போகக் கூடும்.

கடக ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. களத்திர ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், தன் சொந்த வீடான கும்பத்தில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் என்பதால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அதிக விரயங்கள் ஏற்படும். இட மாற்றம், ஊர் மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். தொடர்ந்து சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபடுவதன் மூலமே சங்கடங்களில் இருந்து விடுபட இயலும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம்.

மன நிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றமும், தொழில் மாற்றமும் மனதிற்கு ஏற்றவிதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறைஅதிகரிக்கும். இது ஒரு சோதனைக்காலமாக இருக்கும் என்பதால் எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகிய இடங்களைக் குறிக்கும் அந்த இடங்களில் சனியின் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்துசேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால் குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும். எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய இயலாது. யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற இயலாது.

சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் எதிர்கால நலன்கருதி விரயம் செய்ய நேரிடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் பிரச்சினைகள் உருவாகலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்துசேரும். பிரச்சினையை உருவாக்கிக் கொண்டிருந்த பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க நீங்கள் செய்யும் முயற்சிகள் பலன் தராது. பொருளாதாரப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கும் சூழலும் உண்டு.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து காட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். சொந்தங்களுடன் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

குடும்ப முன்னேற்றம் கூடும். பெண்களின் சுபச்சடங்குகள், கல்யாணம், காது குத்து போன்றவை நடைபெறும். வியாபாரத்தில், தொழில் போட்டிகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல நிறு வனங்களில் பணிபுரிய வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம்.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

சுபவிரயங்கள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது. உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்து சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கு குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பண வரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்து இழந்த செல்வத்தை மீண்டும் வரவழைத்துக் கொள்வீர்கள். பெண் பிள்ளைகளின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும்.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது பண நெருக்கடி அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைமீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்கி தடுமாற்றத்தை உருவாக்குவர். 'விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?' என்று கூட சிந்திப்பீர்கள். கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது இட மாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக குடும்ப ஒற்றுமை கொஞ்சம் குறையலாம். உடல்நலத்திலும் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவை ஏற்படுத்தும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கலாம்.

கொடுக்கல்-வாங்கல்களில் தடுமாற்றங்கள் உண்டு. கேது 2-ம் இடத்திற்கு வருவதால் குடும்பச்சுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரலாம். சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபடுவதோடு சிறப்பு வழிபாடாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக் கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் வன்னிமரத்தடி சனீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

Similar News