கடகம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2023-01-13 13:32 GMT   |   Update On 2023-01-13 13:33 GMT

தாய்மை உணர்வு நிறைந்த கடக ராசி அன்பர்களே இதுவரை ராசிக்கு 7-ம் இடத்தில் நின்று கண்டகச் சனியாக ஆட்டுவித்த சனி பகவான் தற்பொழுது ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார்.

தன் 3-ம் பார்வையால் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 2ம்மிடமாகிய தன ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார்.

அஷ்டமச் சனியின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில் நின்று திருமணத் தடை, களத்திரத்துடன் மன பேதம், தொழில் கூட்டாளிகளிடம் மனக்கசப்பையும் ஏற்படுத்திய சனி பகவான் 8-ம் மிடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்கிறார். அஷ்டமாதிபதி ஆட்சி பலம் பெறுகிறார். எந்த வகையில் பார்த்தாலும் கடக ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அஷ்டமச்சனி காலத்தை கடத்த வேண்டும் .7-ம் இடத்தில் இருந்த போது அனுபவித்த பிரச்சனைகளே சமாளிக்க முடியாத நிலையில் இருக்கும் போது அஷ்டமச் சனியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலக்கமாக இருக்கும்.

பதறாத காரியம் சிதறாது. திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம் என்பதால் இறை நம்பிக்கையுடன் பொறுமையாக நிதானமாக திட்டமிட்டு செயல்பட்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிக்க முடியும். இறையருள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமும் உண்டாகும்.

அஷ்டமச் சனி மனித வாழ்வில் சோதனை மிகுந்த காலம். ஆயுள் தீர்க்கம். ஜனன கால ஜாதகத்தில் சுப பலன் தரக்கூடிய கிரகங்களின் தசா புத்தி நடந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்லலாம்.உடல் நலம் குறையும்.வைத்தியச் செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அஷ்டமச் சனியின் வேலையே தொழில் உத்தியோகத்தில் இன்னல்கள் தந்து பொருளாதார நெருக்கடியை மிகுதிப்படுத்தும். சாமனியர்களையும் நிலை தடுமாற வைக்கும் என்பதால் வரவுக்கு தகுந்த செலவுகளை திட்டமிட வேண்டும். யாருக்கு ஜாமீன் போடக்கூடாது. தேவையில்லாமல் வாக்கு கொடுப்பது, சத்தியம் செய்வதை தவிர்க்கவும். அடுத்தவர் பிரச்சனையிலும் தலையிடாமல் இருப்பது நன்மை. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பண வரவுகள் ஏற்படும். அதிர்ஷ்டம், பண வரவு உங்களைச் சார்ந்தவர்களுக்கே பயன்படும்.

சனியின் 3-ம் பார்வை பலன்: 8-ம் இடத்தில் இருக்கும் சனியின் பார்வை 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு இருப்பதால் புதிய தொழில் ஒப்பந்தம் , முதலீட்டை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடு செய்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க கூடாது. தொழில் போட்டி கடுமையாகயாக இருக்கும். முதலாளி தொழிலாளி பிரச்சனையால் உற்பத்தி குறையும். வாடிக்கையாளார்களிடம் கோபம் காட்டினால் வேறு நபரிடம் சென்று விடுவார்கள். என்பதால் கனிவாக பழக வேண்டும். அரசின் சட்ட திட்டங்கள் சமாளிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். உங்கள் தொழில் கவுரவத்தை நிலைநாட்ட கடுமையான மன உளைச்சலை சந்திக்க நேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும்.

7-ம் பார்வை பலன்: சனி பகவானின் 7-ம் பார்வை 2-ம் இடமான தனம், வாக்கு ,குடும்ப ஸ்தானத்திற்கு இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. நீங்கள் பேசிய வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினாலும் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும்.

10-ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு இருப்பதால் பூர்வீகம் தொடர்பான விசயங்களில் அதிரடி முடிவுகள் எடுக்காமல் இருப்பது நலம். எல்லா பிரச்சனைகளுக்கும் நீதி மன்ற படி ஏறுவதுதான் தீர்வு என்றால் மன உளைச்சல் அதிகமாகுமே தவிர குறையாது. இருக்கும் மிச்ச மீதி , மானம் , பண விரையம் , நேரம் என்று இழப்பிற்கான பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

எந்தப் பிரச்சனையும் சாந்தமான வார்த்தைகளால் பேசி தீர்ப்பது நல்லது. அந்நிய மொழிப் புலமை ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம். காதல் கலப்பு திருமணம் நடைபெறும். புதிய தொழில் முயற்சியைத் தவிர்க்கவும். இந்த சனிப் பெயர்ச்சியால் நீங்கள் அடையும் பெரும் பாக்கியம் குல தெய்வ அனுக்கிரகம் மட்டுமே. குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும். சனியின் பார்வை பட்ட இடங்கள் பாதிப்பைத் தந்தாலும் சனி பயணிக்கும் நட்சத்திரங்கள் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

கடக ராசிக்கு 5,10-ம் அதிபதியான. செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத் தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் பெரிய பாதகம் ஏற்படும் வாய்ப்பு இல்லை.5-ம் இடம் பதவி ஸ்தானம், புத்திர ஸ்தானம்.

10-ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் உத்தியோகம், தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும் .குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகளும் வழக்குகளும் முடிவுக்கு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 10-ம் இடத்திலும் அதன் பிறகு 9-ம் இடத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அபரிமிதமான வாழ்வியல் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கே தெரியாமல் முடங்கி கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். சிரமமான கடுமையான காரியங்கள் கூட எளிமையாக நடந்து முடியும். இஷ்ட தெய்வ வழிபாடு, குடும்பத்தில் சுப மங்கள நிகழ்வுகளும், சுப மங்கள விரயச் செலவுகளும் ஏற்படும்.

17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் வேலை தேடுபவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்காக திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவு செய்வீர்கள். வயதான கடக ராசியினர் தாத்தா, பாட்டியாகுவார்கள்.முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை கடக ராசிக்கு 6,9-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உத்தியோகம், தொழில் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் மன நிறைவாக நடந்து முடியும். அடிமைத்தனத்துடன் நாடோடிபோல் வாழ்ந்தவர்களுக்கு நிரந்தமான தொழில், அதிர்ஷ்டம், முன்னேற்றம், புகழ் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அடிப்படை தேவைக்கு தடுமாறியவர்களுக்கு கூட தாராளமான பணப் புழக்கம் உண்டாகும். பங்காளிகள் பிரச்சனை, கோர்ட் , கேஸ் வாய்தா என அலைந்த நிலை மறையும். தற்கொலை வரைச் சென்றவர்களுக்கும் வாழ்க்கையில் பிடிப்பு, தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கும், திட்டமிடுதலுக்கும் குடும்ப உறவுகள் உதவியாக, ஆறுதலாக, பக்கபலமாக இருப்பார்கள்.

30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்தி ரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு 2 நபர்களின் வேலையை செய்ய நேரும் உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு . அரசு அதிகாரிகள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படலாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைபடும். பணிகளில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளால் உங்கள் மீதான நீண்ட நாள் நம்பிக்கை குறைவுபடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

திருமணம்: தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் இரண்டரை ஆண்டு காலம் திருமணம் நடத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

பெண்கள்: ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். பொருளாதார பற்றாக்குறை விலகும். செலவிற்கேற்ற வரவும் வரும். கொடுக்கல், வாங்கல் சீராகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை முடிவுக்கு வரும். பெண்களுக்கு 8ம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். தாலியை கழட்டக் கூடாது. செவ்வாய் கிழமை செவ்வரளி சாற்றி முருகனை வழிபடவும்.

பரிகாரம்: பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சுய ஜாதக தசா புக்தி ரீதியான பரிகாரங்கள் செய்து கொண்டால் எல்லாச் சங்கடங்களும் விலகும்.சில விசயங்கள் துவக்கத்தில் சாதகம் இல்லாமல் இருந்தா லும் முடிவில் வெற்றி உங்களுக்கே உண்டாகும்.சனிக்கிழமைகளில் சக்ரத்தாழ்வார் நரசிம்மர் வழிபாடு செய்ய மன நிம்மதி தேடி வரும். சனிக்கிழமை வன்னி மரத்தை வலம் வர வேண்டும். தினமும் திருக்கோளாறு பதிகம் பாராயணம் செய்தால் நவகிரக தோஷம் விலகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News