கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:19 GMT   |   Update On 2023-04-15 13:33 GMT

தாயன்பு நிறைந்த கடக ராசியினரே இதுவரை ராசிக்கு 9ம்மிடத்தில் நின்று பாக்கிய பலன்களை வழங்கிய குருபகவான் 10ம்மிடமான தொழில் ஸ்தானம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

தொழில் ஸ்தான குருவின் பலன்கள் :

கடக ராசிக்கு குருபகவான் 6, 9ம் அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி. பாக்கியாதிபதி . ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி குரு பத்தாமிடம் செல்கிறார். பத்தில் வரும் குரு பகவானுக்கு அஷ்டமத்தில் நிற்கும் சனியின் பார்வை பெறுவது சிறப்பித்துச் சொல்லும் பலன் அல்ல. மேலும் சுமார் ஆறு மாதத்திற்கு குரு பகவான் ராகுவுடன் இணைவதும் சற்று ஏற்ற இறக்கமான பலனைத் தரும். எனினும் குரு பாக்கியாதிபதி என்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் புதிய, புதிய எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

சிலருக்கு கடன் பெற்று புதிய சொந்தத் தொழில் துவங்கும் ஆர்வம் உதிக்கும். தீர்மானித்த எண்ணங்களை செயல்படுத்தி வெற்றிபெறுவீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உருவாகும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் வேலைப் பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் உருவாகும். பிறரை நம்பி எதையும் ஒப்படைக்காமல் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் பத்தாமிட குருவாலும் அஷ்டமச் சனியாலும் ஏற்படும் இன்னல்களி லிருந்து விடுபட முடியும். மேலும் சுய ஜாதகத்தில் சொந்த தொழில் அமைப்பை சொல்லும் இடம் பத்தாம் இடம் பத்தாம் அதிபதி மற்றும் லக்னாதிபதியின் பலம் பெற்று சுப வலுப்பெற்ற தசை புத்தி நடந்தால் தொழில் சார்ந்த விஷயங்கள், உத்தியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் குடும்ப ஸ்தானம், தன ஸ்தானம் பலப்படுகிறது. வாக்கு வன்மை சிறக்கும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலை உடையவர்களுக்கு நல்ல மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் காரணம் காரியம் தெரியாமல் நிலவிய சண்டை, வம்புகள் இருந்த இடம் தெரியாமல் விலகும். பாராமுகமாக இருந்த குடும்ப உறவுகள் மீண்டும் பகை மறந்து பேசுவார்கள்.சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். நேரத்திற்கு சாப்பிட நல்ல அறுசுவை உணவு கிடைக்கும்.வறுமை, பசி, பட்டினி நீங்கும்.அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கு சரளமான பணப்புழக்கம் இருக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் அடங்கும். தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கும் யோகம் உள்ளது. கண் சம்மந்தமான குறைபாடுகள் வைத்தியத்தில் அறுவை சிகிச்சையில் குணமாகும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். தாய் வழி உறவுகளுடன் இருந்த கருத்து வேற்றுமை மாறும். தாய்வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். வீடு கட்டுதல், விட்டை புதுப்பித்தல், பழைய வீட்டை வாங்கி புதுப்பித்தல் புதிய வாகனம் வாங்குதல் பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குதல் போன்ற நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரும். எந்த விதமான செலவுகளைச் செய்யும் முன்பும் சுய ஜாதக ரீதியான தசா புத்தி அறிந்து செயல்படுவது நல்லது. அஷ்டமச் சனியின் காலம் என்பதால் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி விழுக்காடு கூடுதலாகும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு ஆறாமிடமான ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிகிறது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். அறுவை சிகிச்சை வரை சென்ற வியாதிகள் எளிய வைத்தியத்திற்கு கட்டுப்படும். உங்களை பகைத்தவர்கள் முகத்துக்கு நேரே பேசியவர்கள் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் நல்ல குணத்தை புரிந்து கொள்வார்கள்.அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். கடனுக்காக உங்களை ஓட ஓட விரட்டிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன்காரர்கள் கால அவகாசம் கொடுப்பார்கள். அல்லது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சிலருக்கு விபரீத ராஜ யோக அடிப்படையில் கடன் தள்ளுபடியாகும். இதுவரை எந்த கடனும் இல்லாதவர்கள் வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தொழில் கடன் என புதியதாக கடன் பெறலாம்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு நான்கில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் சிலர் வயோதிகம் மற்றும் சமூக ஆர்வம் காரணமாக சமுதாய தொண்டு நிறுவனங்களில் இணைத்து பணியாற்றலாம். 10,12ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் சேருவது என்ற மனக் குழப்பம் இருக்கும். சுய ஜாதக ரீதியாக பத்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தின் கல்வியை தேர்வு செய்தால் எதிர்காலம் இன்பமாக இருக்கும்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

கடகத்திற்கு 4, 11ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பொதுச் சபையில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். தாராளமாக பணப்புழக்கம் இருக்கும், அரசு, அரசியலை சார்ந்த நபருடன் நெருங்கிய தொடர்பு, பலவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை, அடுத்தவர்களின் சொத்தை அனுபவிப்பது, சிலர் அடுத்தவர்க்கு பிணாமியாக இருப்பது, வண்டி, வாகன யோகம் வருமானம் என அனைத்தும் சுகமாக அமையும். ஆரோக்கியத் தொல்லை சீராகும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

கடக ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வருமானமும் பெருகும். குடும்பச் சுமையும் கூடும். உங்கள் முயற்சிக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்ப உறவுகளின் இன்ப, துன்பங்களையும் சேர்ந்து சுமக்க வேண்டிய காலம்.தொழில் உடன்படிக்கைகள் மன நிறைவு கொடுக்கும்.

குருவின் வக்ர பலன்கள் :

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் உழைத்த உழைப்பு வீண் போகாது என்பதை உணர்வீர்கள். மேலதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பூர்வீகத்திற்கு வந்து செல்வதில் நிலவிய தடைகள் விலகும். புத்திர பிராப்தம் சித்திக்கும்.

பெண்கள் :

உடலிலும், உள்ளத்திலும் இருந்த தளர்ச்சிகள் நீங்கி புத்துணர்ச்சியும் தோற்றப் பொழிவும் உண்டாகும். குடும்பத்தினர் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அன்பையும், பாசத்தையும் பரிமாறுவீர்கள். பிள்ளைகளாலும், கணவராலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். சிதறிய குடும்பம் ஒன்றாகும். மாதவிடாய் கோளாறு சீராகும்.

மாணவர்கள் :

நான்காம் இடத்தை குரு பார்ப்பதால் அஷ்டமச் சனியையும் மீறி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சில மாணவர்கள் கல்வி, விளையாட்டு, அரிய கண்டு பிடிப்புகள் என பல சாதனைகள் புரிவார்கள். பல பட்டயங்களும் பாராட்டுகளும் கிடைக்கும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் தீய பழக்க வழக்கங்கள் கொண்டவர்களுடன் பழகுவதை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் :

பணியில் விரும்பத்தகாத இடம் மாற்றம் உண்டாகலாம். அந்த மாற்றம் பலன் தருவதற்கு அதிக கால அவகாசம் எடுக்கலாம். பிறர் செய்த தவறு உங்கள் மேல் விழலாம். உங்களை விட அனுபவம் குறைந்த, பண்பு இல்லாதவர் மேலதிகாரியாக வரலாம். உங்களின் திறமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த சூழ்நிலையில் மனம் கலங்காமல் .வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது.

ராகு/கேது பெயர்ச்சி :

அக்டோபர் 30, 2023ல் ராகு 9ம்மிடம் செல்கிறார். கேது 3ம்மிடம் செல்கிறார். இந்த கால கட்டத்தில் உடன் பிறந்தவர்களாலும் தந்தையாலும் பூர்வீகச் சொத்து தொடர்பான மன உளைச்சல் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும். குடியிருப்பை மாற்றம் செய்ய நேரும். தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பலிதமாகும்.

பரிகாரம் :

காலம் ஒரு நாள் மாறும். கவலைகள் யாவும் தீரும். மாற்றம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. குருவின் பார்வை பலம் அஷ்டமச் சனியின் தாக்கத்தைக் குறைக்கும். வெள்ளிக்கிழமை அன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயம் சென்று மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை கொண்டு அர்ச்சித்து இனிப்பு நிவேதனம் செய்து வழிபட தொழில் வளர்ச்சி பெறும். பெளர்ணமி அன்று கோ பூஜை செய்து வழிபட சகல விதமான நன்மைகளும் உண்டாகும். இயலாதவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கி வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News