கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 05:43 GMT   |   Update On 2024-04-16 05:47 GMT

கடகம்- லாப குரு 70%

அன்பும், பாசமும் நினறந்த கடக ராசியினரே!

இதுவரை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் மே1, 2024 முதல் 11ம்மிடமான லாப ஸ்தானம் செல்கிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் 9ம்மிடமான பாக்கியஸ்தானத்திலும் கேது பகவான் 3ம்மிடமான பராக்கிரம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள்.

லாப குருவின் பொது பலன்கள்:

கடக ராசிக்கு 6, 9ம் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானமான 11ம்மிடம் செல்லுவது சிறப்பு. அஷ்டமச் சனியால் ஏற்பட்ட இன்னல்களை லாப ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான் ஈடு செய்யப்போகிறார்.இந்த குருப் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் நிலையை சீர் செய்யவே வருகிறதோ? என்று வியக்கும் வகையில் நற்பலன்கள் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். பாக்கியாதிபதி லாப ஸ்தானம் வருகிறார் என்று நினைக்கும் போதே மனம் ஆனந்த கூத்தாடும்.

இந்த பிறவியில் உங்களின் பாக்கிய ஸ்தானமும், லாப ஸ்தானமும் ஒருங்கே இணைந்து பலன் தரும் காலம். இந்த பாக்கியம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்க 12 வருடம் காத்திருக்க வேண்டும். லாப குருவாலும் 9ம்மிட ராகுவாலும் வெளிநாட்டு வியாபாரத்தொடர்பை ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் லாபகரமாக இருக்கும். உணவுப் பொருள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருளை விற்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.

உணவு, ஆடை ஆபரணங்கள் ஏற்றுமதி தொழிலில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் எண்ணம் தோன்றும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொழில் முடக்கம் இடையூறுகள் சீராகும். தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கூடி வரும். மூத்த சகோதரம், சித்தப்பா, இளைய மனைவி மூலம் ஆதாயம் உண்டு.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

லாப குருவின் 5ம் பார்வை 3ம்மிடமான தைரிய, சகாய ஸ்தானத்தில் பதிகிறது.அங்கே கேது இருப்பதால் நல்லது, கெட்டது நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்துச் செயல்பட வேண்டும். தைரியம், தெம்பு கூடும். உங்களின் தோற்றம் பொலிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். தடை, தாமதங்கள் விலகி அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். எதற்கும் அஞ்சாமல் கம்பீரமாக சிந்தித்து செயல்படுவீர்கள். சாஸ்த்திர ஞானம் மிகும். அழகாக ஆடம்பரமாக உங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள்.

உடன் பிறந்தோரிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் மறையும். சகோதர உறவு மேம்படும்.சிறு தூர இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம்.பிறருக்கு உதவும் குணம் அதிகமாகும்.

செக் மோசடி. பத்திரத்தின் மேல் அடமானம் பெறுதல், கொடுத்தல், ஜாமீன் போன்றவற்றில் கவனம் தேவை. அண்டை, அயலாருடன் ஏற்பட்ட எல்லைத் தகராறுகள் சீராகும். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்தால் மன உளைச்சல் ஏற்படாது. திருடு போன பொருட்கள் கிடைக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

குருவின் 7ம் பார்வை ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. அங்கே 7, 8ம் அதிபதியான சனியின் பார்வையும் பதிகிறது. குல தெய்வ அனுகிரகம் ஏற்படும் காலம் . குல தெய்வ தோஷம், சாபம் இருந்தால் சரி செய்ய மேற்கொள்ளும் வழிபாடு பலன் தரும். குரு சாபம், பிராமணர்களின் சாபத்தால் உருவாகும் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய உகந்த காலம். புத்திர சோகம் விலகும். உங்கள் மருமகளின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் உங்கள் தேவைக்கு அதிகமாக பணப் புழக்கம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி வாய்ப்பு அல்லது பதவி உயர்வு ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள், பொறுப்புகள் தாமாகவே வந்து சேரும். ஒய்வு எடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும் வருமானப் பற்றாக்குறை அகலும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைப்படும் போதெல்லாம் பணவசதி கிடைக்கும். எதிரிகள் புறமுதுகு காட்டுவர்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

குருவின் 9ம் பார்வை சமுதாய அங்கீகாரம் பற்றிக் கூறக் கூடிய 7ம்மிடத்தில் பதிகிறது. கடக ராசியினர் அஷ்டமச் சனி முடியும் வரை திருமணம், கூட்டுத் தொழில், நண்பர்கள் போன்ற விசயங்களில் ஒதுங்கி இருப்பது நல்லது. பல சாதகமான சூழல் இருந்தாலும் சில தடை தாமதங்களும் உண்டு. மனக் குழப்பம், தடுமாற்றம் உடல் நலக் குறைவு இருந்தாலும் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் தேவைகளை நிறைவு செய்யும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள்.

திருமண முறிவு ஏற்பட்டோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பிரிந்து வாழும் கணவன்-மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வர்கள். மனக்கசப்பு மாறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நண்பர்களுடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பணிகளை விரைந்து முடிப்பதில் வேகம், விவேகம் இருக்கும். புத்திர பாக்கியத்திற்கு காத்திருப்போருக்கு நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டு. குழந்தைகள் வழியில் ஆதாயம் , சுப காரியமும் உண்டு. பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024- 13.6.2024 வரை):

கடக ராசிக்கு தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சூரியனின் தட்சத்திரத்தில் குரு பகவான சஞ்சரிக்கும் காலத்தில் ஐந்திற்கும், பத்திற்கும் அல்லாடிய நிலை மாறும். இது வரை கண்டிராத வகையில் நல்ல பொருளாதார முன்னேற்றம் கூடும். பணவரவு அதிகரிக்கும். நன்றாக சிந்தித்து பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிக அக்கறை கொள்வீர்கள். வாக்கு வன்மை கூடும். பேச்சால் குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்துவீர்கள். கடுமையான வார்த்தைகள் பிரயோகம் பண்ணுவதை தவிர்த்தல் நலம்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை):

ராசி அதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்நல்ல மாற்றங்கள் ஏற்படும்.நேர்மறை ஆற்றல் பெருகும்.கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியமாக செயல்படுவீர்கள். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். கடந்த ஒரு வருடமாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்( 21.8.2024 முதல் 8.10.2024 வரை 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

கடக ராசிக்கு 5, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கும் குருபகவான் பிள்ளை பேறு வழங்குவார். எனவே கர்மம் செய்ய புத்திரம் பிறப்பான். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். அதிர்ஷ்டத்தை விரும்பாதவர் களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிறிய உழைப்பில், குறைந்த முயற்சியில் விட்டதை பிடிக்கப் போகிறீர்கள். சிலர் வயோதிகம் காரணமாக பூர்வீகத்தில் வீடு கட்டி செட்டிலாகுவார்கள்.

குருவின் வக்ர காலம் (கடக ராசிக்கு 5, 10ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது.அரசு ஊழியர்களுக்கு விரும்பாத ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடித்தால் சேமிப்பு உயரும். கடக ராசியின் அதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2.2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் எதையும் பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும்.அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது.

மாணவர்கள்:

மாணவ-மாணவிகளின் தனித் திறமைகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். முயற்சி ஸ்தானம் மற்றும் புத்திக்கூர்மையை வலுப்படுத்தும் 5ம் மிடத்திற்கு பாக்கியாதிபதி குருவின் பார்வை பதிவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிவீர்கள். சுமாராக படித்த மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வார்கள்.

பெண்கள்:

குரு பலத்தால் மன வலிமை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்..கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் கடன் சுமை குறையும். கருப்பை தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.

 பரிகாரம்:

லாப குருவின் முழுமையான பலன்களை அனுபவிக்கவும் அஷ்டமச அஷ்டச் சனியின் பாதிப்பு குறையவும் ஸ்ரீ முருகப் பெருமானை வணங்குங்கள்; வாழ்க்கை வளம் பெறும்.

Similar News