கும்பம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

Published On 2023-12-19 05:44 GMT   |   Update On 2023-12-19 05:47 GMT

ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்படுங்கள் இனி!

சனியின் வக்ர காலம்!

19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். மற்றவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் மீண்டும் உங்களிடமே வரலாம்.

கும்ப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 முதல் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். எனவே விரயச்சனி விலகி ஜென்மச் சனியாக மாறுகின்றது. சனி சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரம் திருப்தி அளிக்கும் என்றாலும் பற்றாக்குறையால் பகல்-இரவாக பாடுபட வேண்டியதிருக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

ஜென்மச் சனியின் ஆதிக்கம்!

டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. மனக்குழப்பங்களும் கூடும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களைத் தேடவேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர்.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 7, 10ஆகிய இடங்களில் பதிகின்றது. உடன்பிறப்புகள் வழியில் இருந்த விரிசல்கள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. விரதங்களும், வழிபாடுகளும் நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும். சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பக்குவமாகப் பேசிப் பாராட்டைப் பெறுவீர்கள்.

வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் கர்ம ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம். சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்துபவர்களுக்குப் போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களை சேர்க்க விரும்புவர். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

சனியின் பாதசாரப் பலன்கள்!

செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) வீண் அலைச்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வ நிலை உயரும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடைவர்.

என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.

ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப இயலாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடிவரும். பிள்ளைகளின் திருமணம், பெற்றோரின் மணிவிழாக்கள் போன்றவை நடைபெறும். சுபநிகழ்ச்சிகள் பலவும் நிகழும். இந்த நேரத்தில் சொந்த வீடு வாங்கும் யோகம் கூட ஒரு சிலருக்கு உண்டு.

குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இணைந்து ஒருசில காரியங்கள் கை கூடும். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மாறும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.

குருப்பெயர்ச்சிக் காலம்!

சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் அமைதி குறையும். ஆதாயமும் குறைவாகவே இருக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். வழக்குகள், பஞ்சாயத்துக்கள் என்று வந்து கொண்டே இருக்கும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் ஏராளமாக நடைபெறும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும். வசதி வாய்ப்புகள் பெருக புது யுக்திகளைக் கையாள்வீர்கள். நீடித்த நோய் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உருவாகும்.

கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது குரு பகவான் உச்சம் பெறுவதால் அதன் பார்வை பலனால் நன்மைகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துத் தருவர்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். இதன் விளைவாக நாக தோஷம் உருவாகின்றது. எனவே ஏற்றமும், இறக்கமுமான வாழ்க்கை அமையும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கையில் புரளும்.

மருத்துவச் செலவு உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வது அரிது. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றம் பற்றி அடுத்தவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

வெற்றிபெற வைக்கும் வழிபாடு!

சனிக்கிழமை தோறும் சனி பகவான் சன்னிதியில் கவசம் பாடி வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக தேனி அருகில் உள்ள குச்சானூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

Similar News