search icon
என் மலர்tooltip icon

    கும்பம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

    கும்பம்

    சனிப்பெயர்ச்சி (2023) ராசிபலன்கள், பரிகாரங்கள்

    ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்படுங்கள் இனி!

    சனியின் வக்ர காலம்!

    19.6.2024 முதல் 4.11.2024 வரை மற்றும் 2.7.2025 முதல் 18.11.2025 வரை என்று இரண்டு முறை சனி வக்ரம் பெறுகின்றார். ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கலாம். மற்றவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் மீண்டும் உங்களிடமே வரலாம்.

    கும்ப ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 20.12.2023 முதல் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப் போகின்றார். எனவே விரயச்சனி விலகி ஜென்மச் சனியாக மாறுகின்றது. சனி சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொருளாதாரம் திருப்தி அளிக்கும் என்றாலும் பற்றாக்குறையால் பகல்-இரவாக பாடுபட வேண்டியதிருக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    ஜென்மச் சனியின் ஆதிக்கம்!

    டிசம்பர் 20-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. மனக்குழப்பங்களும் கூடும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களைத் தேடவேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுப்பர்.

    சனியின் பார்வை பலன்கள்!

    உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 7, 10ஆகிய இடங்களில் பதிகின்றது. உடன்பிறப்புகள் வழியில் இருந்த விரிசல்கள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. விரதங்களும், வழிபாடுகளும் நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கும். சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். பக்குவமாகப் பேசிப் பாராட்டைப் பெறுவீர்கள்.

    வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

    சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் கர்ம ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்க வேண்டாம். சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்துபவர்களுக்குப் போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களை சேர்க்க விரும்புவர். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும்.

    சனியின் பாதசாரப் பலன்கள்!

    செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (20.12.2023 முதல் 21.2.2024 வரை) வீண் அலைச்சல்களில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வ நிலை உயரும். 'சேமிப்பு கரைகின்றதே' என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சியடைவர்.

    என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.

    ராகு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (22.2.2024 முதல் 14.3.2025 வரை)

    பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப இயலாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடிவரும். பிள்ளைகளின் திருமணம், பெற்றோரின் மணிவிழாக்கள் போன்றவை நடைபெறும். சுபநிகழ்ச்சிகள் பலவும் நிகழும். இந்த நேரத்தில் சொந்த வீடு வாங்கும் யோகம் கூட ஒரு சிலருக்கு உண்டு.

    குரு சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது (15.3.2025 முதல் 6.3.2026 வரை)

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இணைந்து ஒருசில காரியங்கள் கை கூடும். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மாறும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

    உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.

    குருப்பெயர்ச்சிக் காலம்!

    சனிப்பெயர்ச்சிக் காலத்தில் இரண்டு முறை குருப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதுமட்டுமல்லாமல் வக்ர காலத்தில் கடக ராசிக்கும் குரு செல்கின்றார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம குருவாக இருப்பதால் அமைதி குறையும். ஆதாயமும் குறைவாகவே இருக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். வழக்குகள், பஞ்சாயத்துக்கள் என்று வந்து கொண்டே இருக்கும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.

    மிதுனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்கள் ஏராளமாக நடைபெறும். பிள்ளைகளால் பெருமைகள் சேரும். வசதி வாய்ப்புகள் பெருக புது யுக்திகளைக் கையாள்வீர்கள். நீடித்த நோய் அகலும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உருவாகும்.

    கடகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது குரு பகவான் உச்சம் பெறுவதால் அதன் பார்வை பலனால் நன்மைகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துத் தருவர்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

    26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். இதன் விளைவாக நாக தோஷம் உருவாகின்றது. எனவே ஏற்றமும், இறக்கமுமான வாழ்க்கை அமையும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கையில் புரளும்.

    மருத்துவச் செலவு உண்டு. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வது அரிது. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றம் பற்றி அடுத்தவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

    வெற்றிபெற வைக்கும் வழிபாடு!

    சனிக்கிழமை தோறும் சனி பகவான் சன்னிதியில் கவசம் பாடி வழிபடுவது நல்லது. சிறப்பு வழிபாடாக தேனி அருகில் உள்ள குச்சானூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

    கும்பம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    ஏழரை சனியின் 2ம் பாகம்

    தனித்தன்மை நிறைந்த கும்ப ராசியினரே இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் நின்ற ராசி அதிபதி சனி பகவான் ராசிக்குள் வந்து ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 3ம் மிடமான முயற்சி ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும்,10ம் பார்வையால் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

    ஜென்மச் சனியின் பலன்கள்: கும்ப ராசிக்கு சனி 1, 12ம் அதிபதி. ராசி அதிபதி ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார் என்பது சிறப்பித்து சொல்லக் கூடிய பலன் என்றாலும் ஜென்மச் சனி , ஏழரை சனியின் 2ம் பாகம் என்று நினைக்கவே மனம் வருத்தம் ஏற்படும். சனி பகவான் ராசியைக் கடக்கும் போது எந்த ராசியாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதல் சுற்றாக இருந்தால் சிறிய பாதிப்பு ஏற்படும். இரண்டாம் சுற்றாக இருந்தால் வாழ்வில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளும் நடைபெறும். மூன்றாவது சுற்றாக இருந்தால் ஆரோக்கிய குறைபாடு மிகும். ஜென்மச் சனியின் காலத்தில் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும்.சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும்.

    ஜென்மச் சனியின் காலத்தில் பண மோசடி மிகுதியாக இருக்கும். விரயாதிபதியும் சனி என்பதால் இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும் ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

    3ம் பார்வை பலன்: உங்களின் ராசி அதிபதி சனி 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தை பாரப்பதால் இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் அதிகரிக்கும். தலைவலி, டென்ஷன், சுகர், பிரஷர், பிபி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தலை தூக்கும். வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல் , காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும். மன வேதனையை அதிகரிக்கும் மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். குடும்பத்தவரின் நயவஞ்சக செயலால் சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் ஜென்மச் சனியின் தாக்கத்திலிருந்து எளிதாக விடுபடலாம்.

    7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு இருப்பதால் தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

    வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.கணவன், மனைவி இருவருக்குமே தீர்க்காயுளடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவோ கருத்து வேறுபாடு காரணமாகவோ பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். சிலர் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் கிடைப்பார்கள். சிலர் நண்பர்கள் அல்லது களத்திரத்துடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்குவார்கள்.நண்பர்கள், கூட்டாளிகளுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் அதிக லாபம் ஈட்டுவார்கள். சம்மந்திகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும்.

    10ம் பார்வை பலன்: சனி பகவான் 10ம் பார்வையால் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். உத்தியோகம் தொழில் போன்றவற்றில் நிலையற்ற தன்மை இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும். விவசாயிகள் தவறான ஆலோசனையில் மதி இழந்து பழக்கம் இல்லாத பயிர்களை சாகுபடி செய்யக் கூடாது. கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

    கும்ப ராசிக்கு 3,10ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர் வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும்.மூன்றாம் சுற்று ஏழரை சனி நடப்பவர்கள் பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வேலையில் அலைச்சல் மிகுதியாக இருக்கும். சிலர் ஆன்லைனில் வேலை பார்த்துக் கொடுத்த பிறகு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவார்கள்.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

    கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 3ம்மிடத்திலும் அதன் பிறகு 2ம்மிடமான தன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நீண்ட காலமாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைகூடும். கலைத்துறையினருக்கு இது சிறப்பான எதிர்காலம். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரும். நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு , மரியாதை உயரும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும்.

    திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும்.

    17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.அரசு அங்கீகாரம் இல்லாத வங்களில் போடும் முதலீடுகள் வீடு திரும்பாது. அவசரத் தேவைக்கு அருகில் உள்ள நகைக் கடையில் அடமானம் வைக்காமல் வங்கியை பயன்படுத்த வேண்டும்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

    ராசிக்கு 2, 11ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்வருமானம் பல வழிகளில் வரும். ஒருவரின் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் அனைத்து குடும்ப நபர்களின் வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கும் சரளமான பணப்புழக்கம் உண்டாகும்.அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மூத்த சகோதர வழி ஆதாயம் உண்டு. அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் ' மகிழ்ச்சியை தரும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்று கருத்து மறையும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில்எ ந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் மனதில் வெறுமை வாழ்வில் பிடிப்பு இல்லாத நிலை, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் இருக்கும். உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது. எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும்.

    திருமணம்: திருமணத் தடை அகலும். சுய ஜாதகத்தில் 7,8ம் மிடத்தில் பிரச்சனை இருந்து திருமணத் தடை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை செய்து பின் திருமணத்தை நடத்த வேண்டும். ஆண், பெண் ஜாதகத்தில் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் விதமான ஜாதகத்தை பொருத்த வேண்டும்.

    பெண்கள்: பெண்களுக்கு உடல் உபாதைகள் அகலும். பலருக்கு வாழ்வில் எதிர்பாராத நல்ல சம்பவங்களும் திருப்பு முனையும் உண்டாகும்.கணவனின் அன்பு, அனுசரனைக் காக ஏங்கிய கும்ப ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு மாமியார், நாத்தனார் டார்ச்சர் குறையும்.பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும்.பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும்.

    பரிகாரம்: கிரகங்கள் தன் கடமையைச் செய்யும். யாரையும் விட்டு வைப்பதில்லை. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு சோதனை இருக்கத்தான் செய்யும். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்தால் எல்லா நாளும் இனிய நாளாக மாறும். தினமும் திருக்கோளாற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். `எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கும்பம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள்

    ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

    ஏழரைச் சனிதான் தொடங்கியது! இறைவழிபாட்டால் மகிழ்ச்சி வரும்!

    கும்ப ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 12-ம் இடத்திற்கு வருகின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. ஏழரைச்சனி என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே யோகத்தையும் கொடுப்பார், விரயத்தையும் கொடுப்பார். விரயத்தைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

    மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் 'நீச்சபங்க ராஜயோகம்' உருவாகின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு, தன-லாபாதிபதி என்பதால் எந்தச் செயலைச் செய்தாலும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்படாது.

    ஏழரைச்சனி ஆரம்பம்

    மிகப்பெரிய கிரகமாகச் சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கு இப்பொழுது ஏழரைச்சனியாக வருகிறார். விரயச்சனி இப்பொழுது வந்திருக்கின்றது. இதற்குபிறகு ஜென்மச்சனி, அதன்பிறகு குடும்பச்சனி என்று வரும். பொதுவாக விரயச்சனி காலத்தில் அமைதியாகச் செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்கநிலையும். தெளிவற்ற மனதுடன் செயல்படும் சூழ்நிலையும் ஏற்படும். உறவினர் களும், நண்பர்களும் செய்த உதவிக்கு நன்றி காட்ட மாட்டார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நினைக்க இயலாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.

    சனியின் பார்வை பலன்கள்

    உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், எதிர்ப்பு, வியாதி, கடன், தந்தை வழி உறவு, பாக்கியம், பாகப்பிரிவினை போன்றவற்றைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால் அங்கெல்லாம் புதிய திருப்பங்களும், மாற்றங்களும் வரப்போகின்றது. 2-ம் இடத்தில் சனி பார்வை பதிவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடினாலும் அதைச் சமாளிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.

    சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தொழிலைப் பொறுத்த வரை புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். எதிரிகள் விலகுவர். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

    சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிணக்குகள் ஏற்பட்டு பிறகு இணக்கம் வரும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு. கைக்கு கிடைத்த பூர்வீக சொத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டுமென்ற ஆர்வம் கைகூடும். தேவைகள் பூர்த்தியானாலும் கூட சில சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்கள் ராசிக்கும் அதிபதி என்பதால் அதை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.

    சனியின் பாதசாரப் பலன்கள்

    27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செய்திகள் அதிகம் வந்து சேரும். தங்களுக்கோ, தங்கள் சகோதரர்களுக்கோ, தங்களின் பிள்ளைக ளுக்கோ கல்யாணம் போன்ற சுபகாரியங்கள், பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடும், உங்களின் மதிநுட்பத்தாலும் மகத்தான பலன்களை வரழைத்துக் கொள்ளும் நேரம் இது.

    28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனதில் நினைத்ததை மறு கணமே செய்யும் யோகம் உண்டு. நடக்கும் தொழிலைக் கொடுத்துவிட்டு வேறு தொழிலை செய்ய நண்பர்களின் ஆதரவைக் கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, 'வெளிநாடு செல்ல முடியவில்லையே' என்ற ஆதங்கம் தீரும். திடீரென நிர்வாகம் உங்களை வெளி நாட்டிற்கு அனுப்ப பரிசீலனை செய்வர். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மனக்குழப்பம் அகல அனுபவஸ்தர்கள் ஆலோசனை சொல்வர். பொது நலத் தில் இருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.

    27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். பத்திரப் பதிவிலிருந்த தடைகள் விலகும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழி காட்டுவர். இக்காலத்தில் சனி பகவானும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். ஜென்ம சனியாவதால் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முன்கோபத்தின் காரணமாகச் சில பாதிப்புகளும், முன்னேற்றத்தில் குறுக்கீடும் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களும் விலகிக்கொள்வதாக பயமுறுத்துவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் அதிகரிக்கும் நேரமிது.

    குருப்பெயர்ச்சிக் காலம்

    சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடக்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தன லாபாதிபதி உலா வருவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, வாக்கு ஸ்தானம் பலப் படுகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.

    ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

    21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கேதுவின் ஆதிக்கத்தால், தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பழைய வாகனத்தை பைசல் செய்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.

    8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை அமையும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறுகள் உருவாகும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லியதன் மூலம் சிக்கல்கள் உருவாகலாம்.

    வெற்றி பெற வைக்கும் வழிபாடு

    பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானையும், சிவனையும், உமையவளையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் நந்தீஸ்வரர் படம் வைத்து அதற்குரிய பதிகங்கள் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

    ×