கும்பம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

Published On 2023-01-13 13:35 GMT   |   Update On 2023-01-13 13:35 GMT

ஏழரை சனியின் 2ம் பாகம்

தனித்தன்மை நிறைந்த கும்ப ராசியினரே இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் நின்ற ராசி அதிபதி சனி பகவான் ராசிக்குள் வந்து ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 3ம் மிடமான முயற்சி ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும்,10ம் பார்வையால் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.

ஜென்மச் சனியின் பலன்கள்: கும்ப ராசிக்கு சனி 1, 12ம் அதிபதி. ராசி அதிபதி ராசியில் ஆட்சி பலம் பெறுகிறார் என்பது சிறப்பித்து சொல்லக் கூடிய பலன் என்றாலும் ஜென்மச் சனி , ஏழரை சனியின் 2ம் பாகம் என்று நினைக்கவே மனம் வருத்தம் ஏற்படும். சனி பகவான் ராசியைக் கடக்கும் போது எந்த ராசியாக இருந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதல் சுற்றாக இருந்தால் சிறிய பாதிப்பு ஏற்படும். இரண்டாம் சுற்றாக இருந்தால் வாழ்வில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்வுகளும் நடைபெறும். மூன்றாவது சுற்றாக இருந்தால் ஆரோக்கிய குறைபாடு மிகும். ஜென்மச் சனியின் காலத்தில் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். உங்களின் கற்பனை குதிரை கட்டுக்கடங்காமல் ஓடும். அடங்காத எண்ண அலைகளால் உங்களுக்கு மனதடுமாற்றம் ஏற்படும். யாரை நம்புவது எந்த காரியத்தை செய்வது எதில் லாபம் வரும் என்ற நிதானமற்ற நிலை நீடிக்கும்.சிறிய செயலுக்கு கூட கடுமையாக போராட நேரும். அதனால் மனச் சோர்வு மிகும். திட்டமிட்ட செயல் கூட கடைசி நேரத்தில் காலை வாரும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சுய கவுரவத்திற்கு கெட்ட பெயர் வராமல் நடந்து கொள்ளவும்.

ஜென்மச் சனியின் காலத்தில் பண மோசடி மிகுதியாக இருக்கும். விரயாதிபதியும் சனி என்பதால் இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். நெருங்கிய உறவினர்களுக்கு அவசரத்திற்கு பணம் கொடுத்தால் திரும்ப வராது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் மன சங்கடம் அதிகமாகும் ஏலச்சீட்டு, நகைச் சீட்டு வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

3ம் பார்வை பலன்: உங்களின் ராசி அதிபதி சனி 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தை பாரப்பதால் இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீண் அலைச்சலை ஏற்படுத்தும் பயணங்கள் அதிகரிக்கும். தலைவலி, டென்ஷன், சுகர், பிரஷர், பிபி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தலை தூக்கும். வெகு சிலருக்கு காதில் சீழ் வடிதல் , காது வலி போன்ற காது தொடர்பான பிரச்சனையால் தலை வலி வரும். மன வேதனையை அதிகரிக்கும் மறைமுக எதிர்ப்புகளும், சூழ்ச்சிகளும் போட்டிகளும் அதிகரிக்கும். குடும்பத்தவரின் நயவஞ்சக செயலால் சமுதாயத்தின் மேல் வெறுப்பு ஏற்படும். ஜென்மச் சனியின் காலம் என்பதால் பகைவர்களிடம் கூட அன்பாக பேசி காரியத்தை சாதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால் ஜென்மச் சனியின் தாக்கத்திலிருந்து எளிதாக விடுபடலாம்.

7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு இருப்பதால் தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.கணவன், மனைவி இருவருக்குமே தீர்க்காயுளடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவோ கருத்து வேறுபாடு காரணமாகவோ பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். சிலர் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் கிடைப்பார்கள். சிலர் நண்பர்கள் அல்லது களத்திரத்துடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்குவார்கள்.நண்பர்கள், கூட்டாளிகளுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் அதிக லாபம் ஈட்டுவார்கள். சம்மந்திகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும்.

10ம் பார்வை பலன்: சனி பகவான் 10ம் பார்வையால் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். உத்தியோகம் தொழில் போன்றவற்றில் நிலையற்ற தன்மை இருக்கும். சிலருக்கு மனதிற்கு பிடிக்காத உத்தியோக இடமாற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் உங்களை வந்து பார் என்று வம்புக்கு இழுக்கும். பிறரை பற்றிய விமர்சனத்தை தவிர்ப்பது நல்லது. எனவே வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் வேலையை தக்க வைக்க முடியும். விவசாயிகள் தவறான ஆலோசனையில் மதி இழந்து பழக்கம் இல்லாத பயிர்களை சாகுபடி செய்யக் கூடாது. கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஒருவரின் வேலையில் மற்றவர் குறுக்கிடாமல் இருந்தால் தப்பித்து விடுவீர்கள்.

சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

கும்ப ராசிக்கு 3,10ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறிய பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கண் துடைப்பிற்கான பதவி உயர் வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும்.மூன்றாம் சுற்று ஏழரை சனி நடப்பவர்கள் பனிச்சுமை காரணமாக விருப்ப ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வேலையில் அலைச்சல் மிகுதியாக இருக்கும். சிலர் ஆன்லைனில் வேலை பார்த்துக் கொடுத்த பிறகு உரிய சம்பளம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவார்கள்.

சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை 3ம்மிடத்திலும் அதன் பிறகு 2ம்மிடமான தன ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நீண்ட காலமாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைகூடும். கலைத்துறையினருக்கு இது சிறப்பான எதிர்காலம். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரும். நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு , மரியாதை உயரும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும்.

திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும்.

17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும். புத்திரர்கள் வழியில் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வம்பு, வழக்குகள் சாதகமாகும். பெயர், புகழ் அந்தஸ்து உயரும். கவுரவப் பதவிகள், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.அரசு அங்கீகாரம் இல்லாத வங்களில் போடும் முதலீடுகள் வீடு திரும்பாது. அவசரத் தேவைக்கு அருகில் உள்ள நகைக் கடையில் அடமானம் வைக்காமல் வங்கியை பயன்படுத்த வேண்டும்.

பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

ராசிக்கு 2, 11ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்வருமானம் பல வழிகளில் வரும். ஒருவரின் வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் அனைத்து குடும்ப நபர்களின் வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கும் சரளமான பணப்புழக்கம் உண்டாகும்.அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மூத்த சகோதர வழி ஆதாயம் உண்டு. அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் ' மகிழ்ச்சியை தரும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்று கருத்து மறையும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தந்தை வழி சுற்றத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு அகலும். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும்.

30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில்எ ந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் மனதில் வெறுமை வாழ்வில் பிடிப்பு இல்லாத நிலை, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் இருக்கும். உங்களின் திறமையும் பேச்சு சாதுர்யமும் பல இடங்களில் கை கொடுக்காது. எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற உணர்வு வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தலை தூக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும்.

திருமணம்: திருமணத் தடை அகலும். சுய ஜாதகத்தில் 7,8ம் மிடத்தில் பிரச்சனை இருந்து திருமணத் தடை இருந்தால் அதற்கு உரிய பரிகார வழிபாட்டு முறையை செய்து பின் திருமணத்தை நடத்த வேண்டும். ஆண், பெண் ஜாதகத்தில் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் விதமான ஜாதகத்தை பொருத்த வேண்டும்.

பெண்கள்: பெண்களுக்கு உடல் உபாதைகள் அகலும். பலருக்கு வாழ்வில் எதிர்பாராத நல்ல சம்பவங்களும் திருப்பு முனையும் உண்டாகும்.கணவனின் அன்பு, அனுசரனைக் காக ஏங்கிய கும்ப ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு மாமியார், நாத்தனார் டார்ச்சர் குறையும்.பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும்.பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: கிரகங்கள் தன் கடமையைச் செய்யும். யாரையும் விட்டு வைப்பதில்லை. மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு சோதனை இருக்கத்தான் செய்யும். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் விதைத்தால் எல்லா நாளும் இனிய நாளாக மாறும். தினமும் திருக்கோளாற்று பதிகம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்து கேட்க வேண்டும். `எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News