ஆன்மிக களஞ்சியம்

சொர்க்கம் கிடைக்க பிரதமை விரதம்

Published On 2023-07-27 09:24 GMT   |   Update On 2023-07-27 09:24 GMT
  • சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை.
  • பிரதமை திதியை பாட்டிமை என்றும் சொல்வார்கள்.

அமாவாசை பவுர்ணமி அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு ஜபம் இருக்க வேண்டும்.

இன்றைய தினம் விரதமிருந்து பகவானுக்குப் பாயச நிவேதனம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம் அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

இந்த விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றை தினம் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

பாட்டிமை என்பது என்ன?

பிரதமை திதியை பாட்டிமை என்றும் சொல்வார்கள். பௌர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பௌர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பௌர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி.

பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.

கதிர்வீச்சு குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள்.

போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.

சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும்.

அதனால்தான் கிராமங்களில், அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோ காரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும்.

Tags:    

Similar News