search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைக்கு ரத்த பரிசோதனை செய்த போது எடுத்தபடம்.
    X
    யானைக்கு ரத்த பரிசோதனை செய்த போது எடுத்தபடம்.

    மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு ரத்த பரிசோதனை

    மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. #RejuvenationCamp #Elephants
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன.

    முகாமில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையினர் யானைகளை தினசரி காலை மாலை 2 வேளையும் மருத்துவ பரிசோதனை செய்து அவைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முகாமில் கலந்துகொண்ட யானைகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டறிவதற்காக ரத்த பரிசோதனை நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியம் தலைமையில் உதவி மருத்துவர்கள் பரமேஸ்வரன், பிரபு மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் உள்ள 28 யானைகளின் ரத்தத்தை சேகரித்தனர்.

    சேகரித்த ரத்த மாதிரிகள் கோவை அரசு கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை கிடைத்த பின்னர் யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    முகாமில் கலந்து கொண்ட யானைகளில் திருவையாறு தருமபுர ஆதீனம் பஞ்சநதீஸ்வரசுவாமி கோவில் யானை தர்மாம்பாள்,புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமி ஆகிய யானைகள் கால்களில் வெடிப்பு, சிறுபுண் மற்றும் அரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபயிற்சியின்போது இந்த யானைகள் மிகவும் அவதிப்பட்டு வந்தன. இதற்காக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக்குழுவினரால் யானைகளுக்கு பாதக்குளியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #RejuvenationCamp #Elephants #Mettupalayam
     


    Next Story
    ×