என் மலர்
உலகம்
- ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
- அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் RSF தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூடானிய மருத்துவர்கள் அமைப்பு இதை தெரிவித்துள்ளது.
சிவிலியன் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ஆர்.எஸ்.எஃப் வெளிப்படையாக மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது.
- 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு 465 பேர் பலியாகி உள்ளனர். 366 பேர் மாயமாகி இருக்கிறார்கள்.
வெள்ளத்தால் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியது. மேலும், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையும் அனுப்பப்பட்டது. அவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர சுகாதார உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ஒரு நடமாடும் மருத்துவமனையையும், 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி உள்ளது.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் ஆக்ராவிலிருந்து 73 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் புறப்பட்டு கொழும்பில் தரை இறங்கியது.
இந்நிலையில், இலங்கை பேரிடர்- கண்டியில் இந்தியா அமைத்த தற்காலிக மருத்துவமனையில் இலங்கை மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 2,200க்கும் மேற்பட்டோருக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் சென்யார் புயல் உருவானது
- 410 பேர் மயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து காணாமலையை கொடுத்தது.
இந்தோனேசியாவில் 'சென்யார்' புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. மேலும்,410 பேர் மயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படம் வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார்.
- அவர்கள் இருவரும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாட் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை கேத்தி பெர்ரி வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் உள்ள வீடியோவில் இருவரும் ஒன்றாக உணவு உண்பதும், அவர்கள் உற்சாகமாக நேரத்தை செலவிடும் தருணங்களும் உள்ளன. இதற்கு டோக்கியோ சுற்றுப்பயண நேரங்கள் என்று கேத்தி பெர்ரி தலைப்பிட்டுள்ளார்.
- அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர்.
- இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகில் அகதிகள் சிலர் கிரீஸ் நாட்டின் தீவான கிரீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்களது படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
படகு மூழ்கி கிடப்பதை அந்த வழியாக சென்ற துருக்கி கப்பலில் இருந்தவர்கள் பார்த்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டனர். இந்த அகதிகள் படகு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.
- இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்தார் டிரம்ப்.
- தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்புக்கு ஆறுதலாக அமைந்தது.
2017-21 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக செயல்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபாராக தேர்வானார்.
பிரசார கூட்டதில் கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இருந்து உயிர்தப்பி, உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்கா அமெரிக்கார்களுக்கே என்று முழங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், தூங்கி வழிந்த ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாற்றாக ஒரு உறுதியான தலைமையாக இருக்கும் என்று கருதிய அமெரிக்கர்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.
அதன்படி இந்த ஆண்டு, 2025 தொடக்கத்தில் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

அதன் பின் நிகழ்ந்தவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் வரலாறாக மாறின. அது ஒரு தரப்புக்கு உறுதியான முடிவுகளாகவும், மற்றொரு தரப்பிற்கு கிறுக்குத் தனமான முடிவுகளாகவும் படலாம்.
ஆனால் உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக டிரம்ப் செய்த காரியங்கள் மொத்த உலகத்திற்கும் எதிரொலித்தன. வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு அறிவிப்பும் உலகை ஒரு புயல் போலச் சுழற்றியடித்தது.
அப்படி அவர் செய்த விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

முதலாவதாக வர்த்தகம். உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து புலம்பிய டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் பதில் "வரிவிதிப்பு". அதுவரை உயிர் பயத்தை காட்டும் உலகப் போரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பலருக்கு 'வர்த்தக போர்' எப்படி இருக்கும் என்பதை காட்டியவர் டிரம்ப்.
உலகளாவிய வர்த்தக முறையை தலைகீழாக மாற்றி, பங்குச்சந்தைகளை பல்லிளிக்க வைத்த டிரம்ப்பின் வரிவிதிப்புகள் பிரசித்தி பெற்றவை.
ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் எடுத்த அஸ்திரம் தான் வரிவிதிப்பு. ஏப்ரல் 2-ஐ அமெரிக்காவின் 'விடுதலை தினம்' என வர்ணித்த டிரம்ப் உலக நாடுகள் மீது உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளை நிர்ணயம் செய்து அறிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது.
இதுவே வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தாலும் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதில் வரிகளை விதித்தன. இப்படி தொடர்ந்து மாறி மாறி வரி விதித்துக் கொண்டே பாதி வருடம் கழிந்தது. இதனால் உலக பங்குச்சந்தைகளும் பல முறை ஆட்டம் கண்டன. உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டது.
நிலைமை இப்படி இருக்க இந்தியாவை குறிவைத்து டிரம்ப் அம்பு எய்ய தொடங்கினார். ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக புலம்பி வந்த டிரம்ப், ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை பயன்படுத்தி உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்.
இது ஏற்கனவே இருந்த 25 வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிச்சுமையாக மாறியது. ஒரு புறம் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று புகழ்ந்தபடி மறுபுறம் இந்த பாரபட்சமான வரிகளை டிரம்ப் இந்தியா மீது விதித்தது கவனிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டிலும் பல இறக்குமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.
வரியை நிறுத்தி வைக்க எந்தவித கால நீட்டிப்பும் கிடையாது என்று அறிவித்த டிரம்ப், 90 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும்படி சுமார் 200 நாடுகளை வலியுறுத்தியது அவரது வர்த்தக அடாவடி அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

அடுத்ததாக குடியேற்றம். ஜனவரியில் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் விதியை தூக்கி எறிய "பிறப்பால் குடியுரிமை" பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இது பின்னர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு கீழ் நீதிமன்றங்கள் கடந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த ஷாக் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக ஆரம்பித்த டிரம்ப் அரசின் நடவடிக்கை மனிதாபிமற்ற முறையில் மாறியது. டிரம்ப் அரசின் குடிவரவு துறை அதிகாரிகள் பாரிய சோதனைகளை நிகழ்த்தி பல குடும்பங்களை ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தியது. இந்த ஆண்டு 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

அடுத்ததாக போர் நிறுத்தம். நீண்டகாலமாக நடைபெற்று வந்த உலகின் முக்கிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக கங்கணம் கட்டிய டிரம்ப் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். காசா போரை தவிர்த்து இதற்கும் அவர் பயன்படுத்திய அஸ்திரம் வர்த்தகம் தான்.
காசா மீது இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் நடத்திக்கொண்டிருந்த தாக்குதல்களில் இதுவரை 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால் அதன் பின் இஸ்ரேல் ரத்த வெறி அடங்காமல் மீண்டும் போரை தொடங்கியது.
காசா முற்றிலுமாக சிதைக்கபட்டது. மக்களுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கியது. பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாண்டனர்.
சர்வதேச அழுத்தங்களுக்கு செவிமடுக்காத இஸ்ரேல், எஜமானர் ஸ்தானத்தில் உள்ள அமெரிக்காவுக்கு மட்டும் அஞ்சியது. அதே நேரம் இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக நடத்திய அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி அரவணைத்தது. அதேநேரம் இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்த டிரம்ப் தனது 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

அதன்படி அக்டோபர் 9 முதல் போர் நிறுத்தம் பெயரளவில் அமலுக்கு உள்ளது. ஒப்பந்தப்படி ஹமாஸ், எஞ்சிய இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைத்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அக்டோபர் 9 க்கு பிறகும் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே டிரம்ப் காசா மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு அந்நகரை பணக்காரர்களுக்கான ரிசார்ட் நகரமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டத்தையும் முன்வைத்து விமர்சனத்துக்கு உள்ளார். காசாவை சர்வதேச படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பது என ஏறக்குறைய டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டமும் அதற்கான கூறுகளையே அதிகம் கொண்டுள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மே 7 இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதைத்த்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் வெடித்த மோதல் 3 நாட்களில் அதாவது மே 9 ஆம் தேதி மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
மோதலை தொடர்ந்தால் வர்த்தகம் செய்யமாட்டேன் என பிரதமர் மோடியையும், பாக் பிரதமர் ஷெரீபையும் மிரட்டி தானே இந்த போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 60 முறைக்கும் மேல் கூறிவிட்டார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தானுடன், தாய்லாந்து - கம்போடீயா, தாய்லாந்து ருவாண்டா உள்ளிட்ட 8 போர்களை 6 மாதத்தில் தான் நிறுத்தியதாக தம்பட்டம் தட்டிய டிரம்ப் தனது அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் அது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

வெனிசுலாவில் தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்ப்புக்கு ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் அண்மையில் உலக கால்பந்து சம்மேளனம் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி அவரின் வட்டத்தை போக்கியது. சொல் பேச்சு கேட்டும் மற்ற நாடுகளின் போரை நிறுத்தியது போல் உக்ரைன் மீதான ரஷியா போரை நிறுத்த டிரம்ப் அவ்வளவு சுலபமாக நிறுத்த முடியவில்லை.

ரஷிய அதிபர் புதினை, ரஷியாவை ஒட்டிய அமெரிக்க பிரதேசமாக அலாஸ்காவில் நேரில் சந்தித்து டிரம்ப் பேசிப் பார்த்தார். பேரம் படியவில்லை.தொடர்ந்து அமைதியை நிலைநாட்டியே தீருவேன் என டிரம்ப் உறுதியுடன் இருக்கிறார்.
ஆனால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈரானுக்கு அமேரிக்காவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தச் செய்த டிரம்ப், அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளை அழித்ததாக அறிவித்தார். ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. அந்த சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே
இதுதவிர பிந்தங்கிய நாடுகளுக்கு வல்லரசு என்ற முறையில் UNAID திட்டம் மூலம் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை மானாவாரியாக நிறுத்திய டிரம்ப், அமெரிக்கர்களையும் விட்டுவைக்கவில்லை. சிக்கனம் பிடிக்கிறேன் பேர்வலி என்ற பெயரில் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கங்களை மேற்கொண்டார்.
இருப்பினும் காண்டில் இருந்த அமெரிக்கர்களை பிக் பியுட்டிபுல் பில் என்ற வரிக்குறைப்பு மசோதா மூலம் சற்று தாஜா செய்தார் டிரம்ப். இருப்பினும் ஜனநாயக விழுமியங்களை நசுக்கும் விதமாக தனது பேச்சை கேட்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதியை நிறுத்தியது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என ஒரு சர்வாதிகார தலைவருக்கு ஏற்ற சர்வ லட்சணங்களோடு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே வெவ்வேறு துறைகளுக்கு நிதி வழங்குவதில் எதிர்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பட்டால் அமெரிக்காவில் பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் பல அரசு துறைகள் ஊதியமின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தது.

இந்த முடக்கம் 43 நாட்கள் தொடர்ந்து கடந்த நவம்பரில் எதிர்கட்சிகளுடன் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது போதைப்பொருட்களை தடுக்கிறேன் என கூறி களமிறங்கி உள்ள டிரம்ப் தனது பரம எதிரி வெனிசுலா அதிபர் மதுரோ மீது தனது முழு கவனத்தையும் திரும்பியுள்ளார். வெனிசுலா அமைந்துள்ள கரீபியன் கடற்பரப்பில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது, மதுரோ தலைக்கு விலை வைப்பது என படு பிஸியாக டிரம்ப் இயங்கி வருகிறார்.
வயதானதால் டிரம்ப் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை என்று சிலர் கருதினாலும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அவரின் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது கண்கூடு.
வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளிட்ட அவரது முடிவுகள் இதற்கு வலு சேர்கின்றன.
மொத்தத்தில் தனது முதல் பதவிக்காலத்தை விட மிக தீவிரமாக செயல்பட்டு வரும் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலகை ஆச்சர்யத்திலோ அல்லது அதிர்ச்சியிலோ ஆழ்த்தி வருவது தொடர்கிறது. இனியும் தொடரும்.
- சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
- பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அலாஸ்காவின் ஜூனாவ் வில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் அலாஸ்கா வின் யாகுடாட், ஜூனாவ் ஆகிய இடங்களில் உணரப்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- அப்போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது.
- சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
பிரேசில் நாட்டின் ஒலிண்டா நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் ரொனால்ட் மாண்டினீக்ரோ (55) என்ற நபர் கடந்த மாதம் 1 ஆம் தேதி பெஞ்ச் பிரஸ் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது பார் பெல் அவரது கைகளில் இருந்து நழுவி நேரடியாக அவரது மார்பில் விழுந்தது
அவர் உடனடியாக அதை பக்கவாட்டில் அகற்றி எழுந்து நின்றார். சில நொடிகளில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
ஜிம் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாண்டினீக்ரோ உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
- தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மதுபான பாரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 சிறுவர்கள், ஒரு சிறுமி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- விபத்தில் சிக்கிய 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள தேவாலயத்திற்கு எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியானார்கள். 9 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டிய டிரைவர் குறித்து எந்த விவரமும் வெளியாகவில்லை.
- மோதலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் இடையே எல்லையில் சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து கத்தார் மத்தியஸ்த்தால் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு நடந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் நள்ளிரவில் எல்லையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
சாமன் எல்லை பகுதியில் இருதரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டு மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர். அதேபோல் சாமன்- காந்தஹார் நெடுஞ்சாலையில் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதலில் வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மோதலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர். பதானி பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்கு பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளது.
அதேபோல் ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி ஹுல்லா முஜாஹித் கூறும் போது,"காந்தஹாரின் ஸ்பின் போல்டாக் மாவட் டத்தில் புதிய தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி உள்ளது. இதற்கு எங்கள் படைகள் பதிலடி கொடுத்தன.ஸ்பின் போல்டாக் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பொது மக்களை குறிவைத்து பாகிஸ்தான் செயல்படுகிறது" என்றார்.
மோதல் காரணமாக இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
- சிறையில் இம்ரான்கானை சந்திக்கும் நபர்கள், ராணுவத்திற்கு எதிராக கருத்தை பரப்ப பயன்படுத்தப்படுகிறார்கள்.
- ராணுவம் ஒவ்வொரு பிரச்சனையிலும் இழுக்கப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே இம்ரான் கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் சிறைக்குள் சென்று இம்ரான்கானை சந்தித்தார். அதன்பிறகு சிறையில் இருந்தபடியே இம்ரான்கான் வெளியிட்ட அறிக்கையில் ராணுவ தளபதி அசிம் முனீரை கடுமையாக விமர்சித்திருந்தார். அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் ராணுவ தளபதி அசிம் முனீரை விமர்சித்த இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறியதாவது:-
இம்ரான்கானின் அரசியல் ஆசைகள் மிகவும் தீவிரமானதாகிவிட்டன. தான் அதிகாரத்தில் இல்லையென்றால் வேறு எதுவும் இருக்கக்கூடாது என்று அவர் நம்புகிறார். அவருக்கு தற்போது மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்.
சிறையில் இருந்து பொதுமக்களை ராணுவத்திற்கு எதிராக இம்ரான் கான் தூண்டிவிட முயற்சிக்கிறார், இதை பொறுத்துக்கொள்ள முடியாது. சிறையில் இம்ரான்கானை சந்திக்கும் நபர்கள், ராணுவத்திற்கு எதிராக கருத்தை பரப்ப பயன்படுத்தப்படுகிறார்கள்.
ராணுவம் ஒவ்வொரு பிரச்சனையிலும் இழுக்கப்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ரணுவத் தலைவருக்கு எதிராக இம்ரான்கான் அறிக்கைகளை வெளியிடுகிறார். பாகிஸ்தான் ராணுவத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த நாங்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். ராணுவத்திற்கு எதிராக பொதுமக்களைத் தூண்ட அனுமதிக்கமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






