என் மலர்tooltip icon

    உலகம்

    • இத்தாலி மலைப்பகுதி கிராமத்தில் பிறந்நத பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தக் கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த 1990-களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. லாராவின் பிறப்பு அந்தக் கிராமத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    பாக்லியாரா டெய் மார்சி ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது, தகவல்களின்படி 20-க்கும் குறைவானவர்களே வசிக்கின்றனர். இத்தாலியின் பல மலைக் கிராமங்களைப் போலவே, இங்கும் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றுவிட்டதால், முதியவர்கள் மட்டுமே வசித்து வந்தனர்.

    இந்நிலையில், லாராவின் பிறப்புச் செய்தி பரவியதும், அக்கம் பக்கத்து கிராமத்தினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் அந்தக் குழந்தையைப் பார்க்கவும், அக்குடும்பத்திற்கு வாழ்த்துச் சொல்லவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இத்தாலிய ஊடகங்கள் இக்குழந்தையை "மிராக்கிள் பேபி" என்று கொண்டாடுகின்றன. ஏனெனில், மக்கள் தொகை குறைந்து வரும் இத்தாலிய கிராமங்களுக்கு இது ஒரு புதிய உயிர்ச்சக்தியைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

    • பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ‘மணி’ சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

    நேபாளத்தில், காத்மாண்டு மாநகராட்சி மேயராக இருக்கும் பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு (2026) மார்ச் 5 நேபாளத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து, அவர் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒரு உடன்படிக்கையை கையெழுத்திட்டனர்.

    தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு உருவான ஏழு அம்ச உடன்படிக்கையின் படி, 35 வயதான பலேந்திர ஷா, பாராளுமன்றக் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான முகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த உடன்படிக்கையின்படி, பாலேன் மற்றும் அவரின் குழு, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய 'மணி' சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

    பாலேன் என அழைக்கப்படும் பலேந்திர ஷா, அந்த நாட்டின் முன்னாள் ராப் பாடகர் ஆவர்.

    • டாக்காவில் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13ம் தேதி கலிதா ஜியா அனுமதிக்கப்பட்டார்.
    • அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

    டாக்கா:

    அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் நேற்று தெரிவித்தனர். அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.

    கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்தித்தார்.
    • அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.

    வாஷிங்டன்:

    ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, புளோரிடாவில் டிசம்பர் 28 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாகவும், இந்தச் சந்திப்பின்போது உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புளோரிடாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார். அப்போது இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முன்னதாக, அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா பிடித்துள்ள பகுதிகளை விட்டுக்கொடுக்க உக்ரைன மறுப்பு தெரிவிக்கிறது.
    • டிரம்பை இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச இருக்கிறார்.

    ரஷியா- உக்ரைன் இடையில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவர 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான அம்சங்களில் அமெரிக்கா- உக்ரைன் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் பிராந்தியங்களை ரஷியாவுக்கு விட்டுக் கொடுப்பதும், ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலையான சபோரிசியாவை ரஷியாவிடம் ஒப்படைக்கவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இன்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜெலன்ஸ்கி சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் நேற்று ரஷிய அதிபர் புதின், அந்நாட்டின் ஆயுதப்படைகள் கமாண்டு மையத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அங்குள் அதிகாரிகளிடம் பேசும்போது "உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ரஷியா ராணுவ வழியில் அனைத்து சிறப்பு ராணுவ ஆபரேசன் இலக்குகளை அடையும் எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்- ரஷியா எல்லையில் பாதுகாப்பு பகுதி தொடக்கம் சிறப்பான நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் டான்பாஸ் மற்றும் சபோரோசியே பிராந்தியத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    • இராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன.
    • ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் (NLD) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற சில மாதங்களில் 2021-ல் மியான்மரில் ராணுவப் புரட்சி வெடித்தது. இராணுவத்தால் ஆட்சி கலைக்கப்பட்டு அக்கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் உள்ளார்.

    ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். அதேநேரத்தில் 65 நகரங்களில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இராணுவத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கீழ் 57 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இதில் இராணுவ ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி (USDP) முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி (NLD) கலைக்கப்பட்டு, இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலை ஒரு "ஏமாற்று வேலை" (sham) என்றும், இராணுவ ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான முயற்சி என்றும் விமர்சித்துள்ளன. ஆனால் ரஷ்யா, சீனா, பெலாரஸ், கஜகஸ்தான், கம்போடியா, வியட்நாம், நிகரகுவா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தலை மேற்பார்வையிட நேற்றே மியான்மருக்கு சென்றனர்.  

    • ரோபோக்கள் தன்னிச்சையாக பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும்
    • ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

    வியட்நாம் உடனான எல்லை ரோந்து மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு 'Walker s2' என்ற மனித ரோபோக்களை அனுப்ப சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாதம் பணியமர்த்தல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஷென்செனை தளமாகக் கொண்ட UBTECH ரோபாட்டிக்ஸ் கார்ப்பரேஷன், வியட்நாமுக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியான குவாங்சியில் உள்ள ஃபாங்செங்காங் எல்லைக் கடவையில் அதன் வாக்கர் S2 மனித உருவ ரோபோக்களை நிலைநிறுத்த $37 மில்லியன் ஒப்பந்தத்தை அரசிடமிருந்து பெற்றுள்ளது.

    வாக்கர் S2 என்பது கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதியுடன் இணைந்த முழு அளவிலான மனித உருவ ரோபோ ஆகும். இந்த ரோபோ மனித நடமாட்டம் அதாவது மனிதர்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியமர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தாங்களே பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் என்றும், 125° கோணத்தில் வளையும், 15 கிலோ எடையை கையாளும் திறனும் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள் மற்றும் இரவு நேரத்திலும் பார்க்கும் வசதி (Night Vision) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

    ஃபாங்செங்காங்கில், பயணிகள் வரிசைகளை வழிநடத்துதல், வாகனங்களை இயக்குதல் மற்றும் பயணிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் எல்லை அதிகாரிகளுக்கு ரோபோக்கள் உதவும். சில ரோபோக்கள் ஹால்கள் மற்றும் காத்திருப்பு பகுதிகளில் ரோந்து செல்லும். 

    மற்ற ரோபோக்கள் சரக்கு பாதைகளுக்குள் செயல்படும். கொள்கலன் அடையாள எண்களைச் சரிபார்த்தல், முத்திரைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனுப்பும் மையங்களுக்கு நிலை புதுப்பிப்புகளை அனுப்புதல் (Status Updates) மூலம் தளவாடக் குழுக்களை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈகிள் விமானமும் மற்றும் ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டன.
    • உலக வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகக் கருதப்படுவது எது தெரியுமா?

    2025-ம் ஆண்டு மோசமான விமான விபத்துகள் பதிவான ஆண்டாக அமைந்தது. தொழில்நுட்பக் கோளாறுகள், மோசமான வானிலை மற்றும் எதிர்பாராத மோதல்கள் எனப் பல காரணங்களால் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.

    அகமதாபாத் விமான விபத்து

    2025-ன் மிகப்பெரிய துயரம் இந்த ஆண்டின் உலகிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய அகமதாபாத் விமான விபத்து ஆகும்.

    ஜூன் 12, 2025 அன்று, ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.

    புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மோதி தீப்பிடித்தது.

    விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பலியாகினர். தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்து ஒருவர் மட்டும் அதியசாமாக உயிர் தப்பினார்.

    அமெரிக்காவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

    ஜனவரி 29, 2025 அன்று அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் இந்த நிகழ்ந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற 'அமெரிக்கன் ஈகிள்' விமானமும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் பொடோமேக் ஆற்றின் மேலே பறக்கும்போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் விமானத்தில் இருந்த 64 பேரும் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் என மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர்.

    ரஷியாவின் அங்காரா ஏர்லைன்ஸ் விபத்து

    ஜூலை 24 அன்று ரஷியாவின் கிழக்கு மலைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. மோசமான மூடுபனி காரணமாக அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் ஒரு குன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 42 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 48 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தென் கொரியா ஓடுபாதை விபத்து

    ஜனவரி 28 அன்று அன்று ஏர் புசான் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்றபோது அதன் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது.

    விமானிகளின் துரித நடவடிக்கையால் 176 பயணிகள் அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், 27 பயணிகள் படுகாயமடைந்தனர்.

    சூடான் விபத்து

    ஜனவரி 29 அன்று தெற்கு சூடானின் மேல் வான் பகுதியில் எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது.

    இதில் 20 பேர் பலியாகினர். ஒரே ஒரு பயணி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

    கென்யா - மொம்பசா ஏர் சபாரி விபத்து

    அக்டோபர் 28, கென்யாவின் சுற்றுலாப் பகுதியான மொம்பசாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

     2025 விபத்துகள் சொல்வது என்ன?

    2025-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 94-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வான்வழி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் ஆகும்.  

    உலகளவில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வணிக மற்றும் தனியார் விமான விபத்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் விபத்துக்கள் அனைத்தும் விமானப் போக்குவரத்துத் துறையில் எஞ்சின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

    2025-ல் இத்தனை விபத்துக்கள் நடந்தாலும், உலக வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகக் கருதப்படுவது மார்ச் 27, 1977-ல் ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் நடந்ததுதான். இந்த விபத்தில் இரண்டு 'போயிங் 747' விமானங்கள் ஓடுபாதையிலேயே மோதிக்கொண்டதில் 583 பேர் பலியாகினர்.  

     அவிழும் MH370 மர்மம்:

    மார்ச் 8, 2014 அன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.

    புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது.

    மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த விமானத்திற்கு அதில் இருந்தவர்களுக்கும் என்ன ஆனது என்பது இதுநாள்வரை மர்மமாகவே உள்ளது.

    கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இந்த சூழலில் மீண்டும் அந்த விமானத்தை தேடும் பணிகளை மலேசிய அரசு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது.

    • 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி நாடு திரும்பினார்.
    • 24 மணிநேரத்திற்குள் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வங்காளதேச தேசிய கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முதல் பெண் பிரதமருமானவர் கலீதா ஜியா. 2006-ம் ஆண்டில் பிரதமர் கலீதா ஜியாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து கலீதா ஜியா, அவருடைய மூத்த மகன் தாரிக் ரகுமான் (வயது 60) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டநிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தவாறே வங்காளதேச தேசிய கட்சியின் செயல் தலைவராக பணியாற்றி வந்தார்.

    2009-ம் ஆண்டு நடந்த பொதுதேர்தலில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அங்கு நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

    அவர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவத்தின் ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நிறுவப்பட்டது.

    கலீதா ஜியாவின் உடல்நலத்தை காரணம் காட்டி தற்போதைய அரசு சிறையில் இருந்து அவரை விடுவித்தது. வரும் ஆண்டு (2026) பிப்ரவரி 12-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதமர் தேர்ந்தேடுக்கப்படுவார் என முகமது யூனுஸ் அறிவித்தார்.

    இந்த பொதுத்தேர்தலில் வங்காளதேச தேசிய கட்சி சார்பாக தாரிக் ரகுமான் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என அரசல் புரசலாக செய்திகள் வெளியானது.

    இந்தநிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி நாடு திரும்பினார். மனைவி மற்றும் மகளுடன் டாக்கா விமானநிலையத்திற்கு தனிவிமானம் மூலமாக வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

    17 ஆண்டுகளுக்கு பிறகு அவர், மகள் சைமா ரகுமானுடன் வங்காளதேசத்தின் வாக்காளர் அட்டை பெறுவதற்காக நேற்று பதிவு செய்து கொண்டார்.

    24 மணிநேரத்திற்குள் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாரிக் ரகுமான் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு சட்ட ரீதியான எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.

    2009 தேர்தலில் தாரிக் ரகுமானின் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை கேலிகூத்தாக உள்ளதாக அவாமி லீக் குற்றம்சாட்டி உள்ளது.

    • பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது.

    பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

    • தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.

    தைபே:

    தைவான் நாட்டில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கடற்கரை நகரான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    உள்ளூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்தன.

    இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    • இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனது அரசாங்கத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை.
    • அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதிகளை உருவாக்கும்.

    இந்தியா- நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சமீபத்தில் நிறைவு பெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி- நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தொலைபேசியில் உரையாடினர்.

    இதைத்தொடர்ந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இருநாட்டு தலைவர்களும் அறிவித்தனர்.

    இந்த ஒப்பந்தம் மூலம் இருநாடுகளின் விவசாயிகள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது, அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    இதற்கிடையே இந்தியா- நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து வெளியுறவு மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் சுதந்திரமானதோ, நியாயமானதோ அல்ல. துரதிருஷ்டவசமாக இது நியூசிலாந்துக்கு ஒரு மோசமான ஒப்பந்தம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எனது அரசாங்கத்திற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஆகும். எதிர்கால வளர்ச்சி நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.

    எங்கள் முதல் பதவிக் காலத்திலேயே இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவோம் என்று கூறினோம். அதை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்திய நுகர்வோருக்கு கதவைத் திறப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதிகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தம் தனது அரசாங்கத்தின் பரந்த செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×