என் மலர்
புதுச்சேரி

புதுவையில் காதலி இறந்த வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
- புதுவையில் காதலி தற்கொலை செய்த வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணன்சாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை தேங்காய்த்திட்டு பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராதாகிருஷ்ணன்சாய் (வயது19). கல்லூரி மாணவரான இவர் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியும், கேளம் விளையாட்டு வீராங்கனையுமான ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் சகோதரருக்கு தெரியவந்ததும் அவர் தனது தங்கையை கண்டித்து வந்தார். மேலும் ராதாகிருஷ்ணன் சாயிடமும் தனது தங்கையிடம் பழக வேண்டாம் என்று கூறினார்.
இதனால் ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் பேசி பழகி வந்ததை நிறுத்திக்கொண்டார். ஆனாலும், அந்த பெண் வலிய சென்று ராதாகிருஷ்ணன் சாயை அவரது வீட்டில் சந்தித்து பேசி வந்தார்.
இதுபற்றி தெரியவந்ததும் அந்த பெண்ணை அவரது சகோதரர் கண்டித்து எச்சரிக்கை செய்தார். இதனால் விரக்தியில் இருந்த அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் சாய் வீட்டுக்கு சென்று அங்குள்ள மாடி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ராதாகிருஷ்ணன்சாய் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இறந்து போன காதலியின் நினைவாகவே அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதாகிருஷ்ணன்சாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலி தூக்கு போட்டு இறந்து சில நாட்களில் கல்லூரி மாணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






