என் மலர்
புதுச்சேரி

அரசு அதிகாரிகள்- ஊழியர்களின் வருகையை கண்காணிக்க தனிப்படை
- நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, தாமதமாக வரும் அரசு ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தையும், அரசு துறைகளில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- அரசு அதிகாரிகள், ஊழியர்களை கண்காணிக்க நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படையை அமைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசில் 54 துறைகள் உள்ளன.
இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் காலை 8.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை உணவு நேரம். பல துறைகளில் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. நிர்வாக சீர்திருத்த துறை பல முறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை.
அரசு அதிகாரிகள், ஊழியர்களை கண்காணிக்க நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படையை அமைத்துள்ளது. இந்த தனிப்படையினர் நேற்று உள்ளாட்சித்துறையில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே காலை 9.15 மணிக்குள் வந்திருந்தனர்.
இதையடுத்து வருகை பதிவேட்டை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்ட தனிப்படையினர் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். தகவலறிந்த ஊழியர்கள் அவசரகதியில் அலுவலகம் திரும்பினர். தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையாக திடீர் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தனிப்படைக்கு நிர்வாக சீர்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தனி வாகனமும் தலைமை செயலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஒரு ஊழியர் தொடர்ந்து 3 நாள் தாமதமாக வந்தால், அவரின் தற்செயல் விடுப்பில் அரை நாள் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக்கு தாமதமாக வருபவர்களின் பட்டியலை மாதம் தோறும் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு சமர்பித்திட அந்தந்த துறை இயக்குநர்கள் மற்றும் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சம்மந்தப்பட்ட ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கவும், அந்த விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவரை சஸ்பெண்டு செய்யவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, தாமதமாக வரும் அரசு ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தையும், அரசு துறைகளில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.






