search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி- அரசு சார்பு செயலர் உத்தரவு
    X

    புதுவையில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி- அரசு சார்பு செயலர் உத்தரவு

    • பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
    • இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கி அரசு சார்பு செயலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக புதுவை கவர்னர் அனுமதியுடன், அரசு சார்பு செயலர் முத்து மீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் வியாபாரம் எளிதாக நடைபெறவும், சீர்த்திருத்த செயல் திட்டத்தை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை அடையவும், தொழிலாளர் சட்டங்கள் எளிதாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    இந்த நடைமுறை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும். இந்த அனுமதியானது புதுவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன் விதிகளை சமரசம் செய்யாமல் தரப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

    பெண் ஊழியர்கள் பாதுகாப்பு பணியாளர்கள் ஏதேனும் விடுமுறையில் அல்லது சாதாரண பணி நேரத்திற்கு பிறகு, கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர் மீது புதுவை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்ய தேவையில்லை. குறிப்பாக, பெண் ஊழியர்களிடம் எழுத்துப் பூர்வ ஒப்புதலை பெற்ற பிறகு, அவர்களை இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம்.

    பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

    போக்குவரத்து வசதிகள் இருப்பதை குறிக்கும் வகையில், நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    பெண் ஊழியர்களை பணியமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×