என் மலர்
புதுச்சேரி

புதிய மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
- மதுக்கடை திறக்கக்கூடாது எனக்கூறி காமராஜர் மணி மண்டபம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மற்றொரு பிரிவு பெண்கள் மதுகடை முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை- தமிழக எல்லைப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபானக்கடையை அமைக்க கலால்துறை அனுமதி அளித்துள்ளது.
இதற்கு அப்பகுதியான சாமிபிள்ளைத்தோட்டம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய மதுக்கடை வரும் பகுதியில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தி சாமிபிள்ளைத்தோட்டம் மக்கள் மதுபானக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்தனர்.
இக்குழுவின் சார்பில் மதுக்கடை திறக்கக்கூடாது எனக்கூறி காமராஜர் மணி மண்டபம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்ட எதிர்ப்புக்குழு லெனின்துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்ர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பா.ம.க. அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலர் சேதுசெல்வம், தமிழர் களம் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் மதுபானக்கடை கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துகோஷம் எழுப்பினர். அரசியல் தலைவர்கள கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது பெண்களின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியெறி புதிய மதுபான கடை முன்பு திரண்டனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர்.இதனால் போலீசாருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுகடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என கூறி அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும், பெண்கள் தொடர்ந்து அங்கேயே நின்றனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களில் ஒருபிரிவினர் பெண்களுடன் இணைந்தனர். இதனையடுத்து அவர்கள் சாலையின் ஒரு பகுதியில் தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டடவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மற்றொரு பிரிவு பெண்கள் மதுகடை முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர். போலீசார் சமாதானபடுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






