என் மலர்
புதுச்சேரி

பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருட முயற்சி
- பூட்டை 2 பேர் உடைத்து மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- திருடர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
புதுச்சேரி:
கடலூர் ரெட்டிச்சாவடி கரிக்கன்நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 24) இவர் உருளையன்பேட்டை முருகன் கோவில் வீதியில் தங்கி சைன்போர்ட் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல வேலை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
அதிகாலை 12.30 மணிக்கு வாசலில் ஏதோ உடைப்பது போல சத்தம் கேட்டது. உடனே அவர் எழுந்து வெளியில் சென்று பார்த்தபோது பூட்டை 2 பேர் உடைத்து மோட்டார் சைக்கிளை திருட முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் திருடன் திருடன் என சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் எழுந்து ஓடிவந்தனர்.
உடனே திருடர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து திருடர்கள் 2 பேரையும்பொதுமக்களிடமிருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், அவர்கள் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அரவிந்தசாமி (வயது19), அரிகரசுதன் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் திருட பயன்படுத்திய ஸ்குருடிரைவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






